சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 44 பேர் கைது..


 கடந்த மே மாதம் 16ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 44 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது எட்டு டிங்கி படகுகள், இரண்டு கேனோ படகுகள் மற்றும் ஏழு டிரக்டர்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.

திருகோணமலை பனிச்சங்கேணி, சோபா தீவு, பொல்மல்குடா, கிண்ணியா, சூடைக்குடா, ஓட்டமாவடி, அளம்பில், புதுமாத்தளன் மற்றும் யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் கடற்கரை மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கியதாக, கிழக்கு மற்றும் வடக்கு கடற்படைக் கட்டளைகளினால் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கைகளின் போதே இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களையும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள், வணிக வெடிபொருட்கள், தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள், டிரக்டர்கள் மற்றும் மீன்பிடி படகுகள் என்பனவற்றையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு, கொட்பே, மூதூர், வாழைச்சேனை, குச்சவெளி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்கள அலுவலகங்களிலும், புல்மோட்டை பொலிஸ் நிலையத்திலும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.