தெரணியாகலையில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசேட விசாரணை!

தெரணியாகலை நூரி வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றை சோதனையிடச் சென்ற அவிசாவளை பிராந்திய குற்றவியல் பணியகத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழுவொன்றை கைது செய்யச் சென்ற போதே, அவிசாவளை பிராந்திய குற்றவியல் பணியகத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இச்சம்பவத்தில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, தாக்குதலை நடத்திய கடத்தல்காரர்கள் குழுவினரும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட வீட்டில் போதைப்பொருள் வியாபாரம் நடைபெறுவதாகக் கிடைத்த அநாமதேய மனு ஒன்றின் அடிப்படையிலேயே பொலிஸ் குழுவினர் இந்தச் சோதனையை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, போதைப்பொருட்களுடன் அவ்வீட்டிலிருந்த நான்கு இளைஞர்களை பொலிஸார் கைது செய்தனர்.

எனினும், தங்களிடம் போதைப்பொருள் இல்லை என்றும், பொலிஸாரே தங்களைத் தாக்கியதாகவும் கூறி அந்த இளைஞர்கள் பொலிஸார் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பின்னர், பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி, சிவில் உடையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை அந்த இளைஞர்கள் குழுவினர் அச்சுறுத்தியுள்ளனர்.

அந்தத் தருணத்தில், பொலிஸ் உத்தியோகத்தர் சந்தேகநபரின் கைவிலங்கை கழற்றியதை அடுத்து, அங்கிருந்த கும்பல் அந்தப் பொலிஸ் உத்தியோகத்தரைத் துரத்தித் துரத்தித் தாக்கியுள்ளது.

அதன் பிறகு, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் பணப்பையினுள் (Wallet) 'ஐஸ்' போதைப்பொருள் இருப்பதாகக் கூறி இளைஞர் ஒருவர் ஆக்ரோஷமாக நடந்துகொண்டுள்ளார்.

தொடர்ந்து, பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நபர்களை அக்கும்பல் மீட்டெடுத்ததுடன், அந்தப் பணப்பையை தெரணியாகலை பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, நான்கு இளைஞர்களும் தெரணியலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக அவர்கள் அங்கு வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அதேவேளை, இந்த இளைஞர்களால் தாக்குதலுக்குள்ளான நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.