அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் கட்டிடங்கள் மற்றும் ஏனைய வசதிகளுக்காக நிதி ஒதுக்கப்படும் - பிரதமர் தெரிவிப்பு


அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் கட்டிடங்கள் மற்றும் ஏனைய வசதிகளுக்காக நிதி ஒதுக்கப்படும் என கல்வி, உயர்கல்வி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் தெரிவித்தார்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் கடந்த வாரம் பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உரையாற்றிய அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இந்த வருடம் ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் 80, ஆங்கில ஆசிரியர்கள் 40, விஞ்ஞான ஆசிரியர்கள் 30, கணித ஆசிரியர்கள் 30 மொத்தமாக 180 ஆசிரியர்கள் பயிற்சிக்காக சேர்க்கப்படவுள்ளனர்.

இந்த நிலைமையில் அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் வகுப்பறைக் கட்டிடங்கள், ஆராதணை மண்டபம், அதிபர் விடுதி, விளையாட்டு மைதான பார்வையாளர் அரங்கு மற்றும் நீர் விநியோகத் திட்டங்கள் புனரமைப்பதற்கான விசேட நிதியினை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தெரிவித்தார்

இது தொடர்பாக பிரதமர் பதிலளிக்கையில், அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் கல்வி, உயர்கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் பிரகாரம் வகுப்பறைக் கட்டிடங்களை திருத்துவதற்கு 18 மில்லியன், அதிபர் விடுதிக்காக 7 மில்லியன், கூட்ட மண்டபத்திற்கு 08 மில்லியன் மொத்தமாக 33 மில்லியன் நிதி முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனைய தேவைகளை கருத்தில் கொண்டு செயற்படுத்தப்படும் என்றார்.