பிக்குகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடுவோம் - பாட்டலி சம்பிக்க ரணவக்க


பல்லேகம ஹேமரத்ன தேரரின் விவகாரத்தை தொடர்ந்து பௌத்த பிக்குகள் மற்றும் புத்தசாசனத்தை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் விமர்சனங்களால் பிக்குகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புத்தசாசனத்தை அவமதிக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

புத்தசாசனத்தையும், பிக்குகளையும் அவமதிக்கும் வகையில் திட்டமிட்ட வகையில் செயற்பாடுகள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகிறது. பல்லேகல ஹேமரத்ன தேரர் விவகாரத்தை தொடர்ந்து இந்த செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

பல்லேகம ஹேமரத்ன தேரரின் விவகாரத்தை நாங்கள் நியாயப்படுத்தவில்லை. அந்த விவகாரம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒரு விடயத்தை கொண்டு ஒட்டுமொத்த புத்தசாசனத்தையும் மலினப்படுத்த இடமளிக்க முடியாது.