
பேரூந்து கட்டண உயர்வு தொடர்பில் போக்குவரத்து அமைச்சுடன் இன்று வெள்ளிக்கிழமை கலந்துரையாடுவோம்.சாதகமான தீர்வு கிடைக்காவிடின் அடுத்தவாரம் கடுமையான தீர்மானத்தை எடுப்போம் என அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பில் போக்குவரத்து பிரதி அமைச்சருடன் வியாழக்கிழமை (4) கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் பேருந்து கட்டணம் வருடாந்த கட்டண திருத்தத்துக்கு அமைய திருத்தம் செய்யப்படும். இதற்கமைய எதிர்வரும் மாதம் பேருந்து கட்டணம் திருத்தம் செய்யப்பட வேண்டும். கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் உறுதியாக குறிப்பிட்டுள்ளோம்.
வருடாந்த கட்டணத் திருத்தத்துக்கு அமைய பேரூந்து கட்டணத்தை திருத்தம் செய்ய முடியாது என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டது முற்றிலும் தவறானது.
சட்டத்தின் பிரகாரமே வருடாந்த கட்டணத் திருத்தம் செய்யப்படுகிறது. அரசாங்கம் இதில் தலையிட கூடாது. ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலை உயர்வடையும் ஆனால் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படாது என்று குறிப்பிடுவது எந்தளவுக்கு நியாயமானது.
பேரூந்து கட்டண உயர்வு தொடர்பில் போக்குவரத்து அமைச்சுடன் இன்று கலந்துரையாடுவோம்.சாதகமான தீர்வு கிடைக்காவிடின் அடுத்தவாரம் கடுமையான தீர்மானத்தை எடுப்போம்.
மக்களை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டிய நோக்கம் எமக்கு கிடையாது. கட்டணத்தை அதிகாரிக்காவிடின் எரிபொருள் மானியமாவது வழங்க வேண்டும். எமக்கு ஏதாவதொரு வழியில் நிவாரணம் வழங்காவிடின் தனியார் பேரூந்து தொழிற்றுறையை முன்கொண்டுச் செல்ல முடியாது என்றார்.







.jpg)




