வெவ்வேறு பகுதிகளில் இரண்டு சடலங்கள் மீட்பு ; பொலிஸார் தீவிர விசாரணை!


கலவெல மற்றும் தெரணியகல ஆகிய பகுதிகளில் இருவேறு சம்பவங்களில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி, கலவெல, வடமேல் கால்வாயை ஒட்டிய ஹல்மில்லகம பகுதியில் உள்ள ரயில் பாலத்திற்கு அருகில் வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் காணப்பட்டதாக செவ்வாய்க்கிழமை (14) கிடைத்த தகவலின் அடிப்படையில் கலவெல பொலிஸார் விசாரணைகளைத் ஆரம்பித்தனர்.

உயிரிழந்தவர் கலவெல பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் மனநல பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தவர் என்றும், கடந்த ஜூலை 13ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறியவர் என்றும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேதஅறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மற்றொரு சம்பவத்தில், தெரணியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போபகந்த ஓயாவில் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தெரணியகல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவர் தெரணியகல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நீதவான் விசாரணைக்கு பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக தெரணியகல வைத்தியசாலையின் பிரேத அறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரணியகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.