
பாராளுமன்றத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (10) நிலையியற் கட்டளை 27(2)இன் கீழ், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்கவிடம் கொழும்பு துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முன்வைத்தார்.
இது தொடர்பாக சாணக்கியன் தெரிவிக்கையில்,
கொழும்பு துறைமுக நகரம் என்பது வெறும் நில அபிவிருத்தித் திட்டம் அல்ல. இது இலங்கையின் பொருளாதார எதிர்காலத்தை மாற்றியமைக்கும் மாபெரும் திட்டமாக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் 15 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்கும், 80,000க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும், இலங்கை தெற்காசியாவின் முன்னணி நிதி மற்றும் வர்த்தக மையமாக மாறும் என்று அரசாங்கங்கள் தொடர்ச்சியாக மக்களுக்கு உறுதியளித்தன. ஆனால், இன்று அந்த வாக்குறுதிகள் எங்கே நிற்கின்றன?
வேலைவாய்ப்புகள் இல்லாத காரணத்தால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தினந்தோறும் இந்த நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். திறமையான மனித வளத்தை நாடு இழந்து வருகிறது. இந்தப் பின்னணியில், துறைமுக நகரம் உண்மையில் நாட்டுக்கு என்ன பொருளாதாரப் பலனை வழங்கியுள்ளது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
அதேவேளை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் ரூபா 10 இலட்சம் முதல் 12 இலட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இவ்வளவு பெரும் பொதுப் பணம் செலவிடப்படும் நிலையில், அந்த நிறுவனத்தின் செயல்திறன் என்ன? அரசுக்கு கிடைத்த வருமானம் என்ன? மக்களுக்கு கிடைத்த பயன் என்ன? என்பதற்கு வெளிப்படையான பதில் வழங்கப்பட வேண்டும்.
இன்று மக்கள் பார்ப்பது என்ன?
நாமல் ராஜபக்ஷ துறைமுக நகரத்திற்குச் சென்று உடற்பயிற்சி செய்வதும், மணல் சறுக்கு (Sand Boarding) விளையாட்டில் ஈடுபடுவதும்தான் ஊடகங்களில் இடம்பெறுகிறது. ஆனால் அந்த இடத்தில் நடைபெற்றதாக கூறப்படும் முதலீடுகள், உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள், அரசுக்கு கிடைத்த வருவாய்கள் குறித்து எந்தத் தெளிவான தகவல்களும் மக்களுக்கு கிடைப்பதில்லை. துறைமுக நகரம் பொருளாதார வளர்ச்சியின் மையமாக மாறியுள்ளதா? அல்லது அரசியல் விளம்பரங்களின் மேடையாக மட்டுமே மாறியுள்ளதா? என்ற சந்தேகம் இன்று பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தற்போது சந்தைப்படுத்தக்கூடிய 178 ஹெக்டேயர் நிலப்பரப்பில், 116 ஹெக்டேயர் நிலம் 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனத்தின் துணை நிறுவனமான CHEC Port City Colombo (Pvt) Ltd நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனமே அந்த நிலங்களை சந்தைப்படுத்தி, அதன் மூலம் கிடைக்கும் வருவாயையும் பெற்றுக்கொள்கிறது.
மேலும், இந்த பொருளாதார வலயம் வெளிநாடுகளில் "வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு எந்த வரம்பும் இல்லை" என்ற வாசகத்துடன் விளம்பரப்படுத்தப்படுகிறது. இதேவேளை, இலங்கை இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துகொண்டிருக்கின்றனர். இந்த முரண்பாட்டுக்கு அரசாங்கம் என்ன விளக்கம் அளிக்கிறது?
2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த வலயத்தில் 77 பல்நோக்கு முக்கியத்துவம் வாய்ந்த வணிகங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த அனுமதிகள் எவ்வளவு முதலீடாக மாறின? எத்தனை நிறுவனங்கள் செயற்படுகின்றன? எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன? என்பதற்கான தகவல்கள் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில், அரசாங்கத்திடம் நான் ஐந்து முக்கியமான கேள்விகளை முன்வைத்தேன்.
முதலாவதாக, CHEC நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 116 ஹெக்டேயர் நிலத்தில் எவ்வளவு நிலம் துணைக் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது? அந்த நிலங்களைப் பெற்றுள்ள முதலீட்டாளர்கள் யார்? அவர்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள்? உண்மையான உரிமையாளர்கள் யார்? ஒவ்வொரு குத்தகையின் காலம் எவ்வளவு? மேலும், அந்த நிலங்களில் எவ்வளவு பகுதி இலங்கையை தளமாகக் கொண்ட நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது?
இரண்டாவதாக, CHEC நிறுவனம் நிலங்களை சந்தைப்படுத்தி பெற்றுள்ள வருமானத்துடன் ஒப்பிடுகையில், அரசாங்கம் இதுவரை கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து எவ்வளவு வருமானத்தைப் பெற்றுள்ளது?
மூன்றாவதாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் துறைமுக நகரத்தின் ஊடாகவும், முதலீட்டு சபை (BOI) மற்றும் ஏனைய வழிகளின் ஊடாகவும் நாட்டுக்கு உண்மையில் கிடைத்த வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) எவ்வளவு?
நான்காவதாக, தற்போது துறைமுக நகரத்தில் பணியாற்றும் மொத்த பணியாளர்களில் எத்தனை பேர் இலங்கையர்கள்? எத்தனை பேர் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்? எத்தனை பேர் வெளிநாட்டவர்கள்?
ஐந்தாவதாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலீட்டு சபை மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவுக்காக சம்பளம், ஊதியம், மூலதனச் செலவுகள், நிர்வாகச் செலவுகள் உள்ளிட்ட மொத்த செலவுகள் எவ்வளவு? அவற்றின் சுய வருமானம் எவ்வளவு? திறைசேரியிலிருந்து வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீடு எவ்வளவு? மேலும், நாட்டுக்கு கிடைத்த ஒவ்வொரு அமெரிக்க டொலர் முதலீட்டையும் ஈர்ப்பதற்காக அரசாங்கம் எவ்வளவு செலவிட்டுள்ளது?
இவை வெறும் அரசியல் கேள்விகள் அல்ல. மக்களின் பணம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது? மக்களின் நிலங்கள் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளன? நாட்டின் எதிர்கால பொருளாதார வளர்ச்சி யாருக்கு பயனளிக்கிறது? என்பதைக் கண்டறியும் அடிப்படை கேள்விகளாகும்.
பொதுமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் எந்த நிறுவனமும் மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியது அவசியம். எனவே, கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் உண்மையான பொருளாதார நிலை, அரசுக்கு கிடைத்த வருமானம், மக்களுக்கு கிடைத்த வேலைவாய்ப்புகள் மற்றும் முதலீடுகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் அரசாங்கம் முழுமையான வெளிப்படைத் தன்மையுடன் பாராளுமன்றத்துக்கும் நாட்டுக்கும் சமர்ப்பிக்க வேண்டும் என்று சாணக்கியன் வலியுறுத்தியிருந்தார்.





.jpg)

.jpg)





.jpg)