முறையற்ற நியமனங்களை உடனடியாக நிறுத்துமாறு கோரி வனவிலங்கு திணைக்களத்தினர் தொழிற்சங்கப் போராட்டம்


சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்துக்குள் உள்வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்துக்கு சொந்தமான அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்களும் திங்கட்கிழமை (13) சுகயீன விடுமுறையை பதிவு செய்து நாடு தழுவிய ரீதியில் திடீர் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்த எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு கட்டமாக பத்தரமுல்லை பகுதியில் அமைந்துள்ள வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள தலைமை அலுவலகத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள வனவிலங்கு திணைக்கள தலைமை அலுவலகத்துக்கு முன்பாக திங்கட்கிழமை (13) முன்னெடுக்கப்பட்ட பாரிய எதிர்ப்பு போராட்டத்தின் போது அகில இலங்கை வனவிலங்கு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் இந்திக்க பீரிஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வனவிலங்குகளை காப்பாற்றுவதற்காக இந்த முறையற்ற நியமனங்களை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதியிடமும் அமைச்சரிடமும் கோரிக்கை விடுக்கிறோம்.

இங்கு கூடியிருப்பது ஏதோ ஒரு சங்கம் மட்டுமல்ல, வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்துக்கு சொந்தமான அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்துதான் இந்த எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை வனவிலங்கு திணைக்களத்துக்குள் உள்வாங்குவது தொடர்பாக எங்களுக்கு பாரிய மற்றும் கடுமையான சிக்கல்கள் பல காணப்படுகின்றன.

இந்த அதிகாரிகளை திணைக்களத்ததுக்குள் இணைத்துக்கொள்ளும் முறையற்ற மற்றும் தன்னிச்சையான நடைமுறைகள் தொடர்பாக எழும் குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதற்காக, திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களுடனும் ஒரு கலந்துரையாடலை வழங்குமாறு நாங்கள் பணிப்பாளர் நாயகத்திடம் கோரியிருந்தோம்.

எனினும் பணிப்பாளர் நாயகம் தொழிற்சங்கங்களுக்கு எந்தவொரு பேச்சுவார்த்தையையும் வழங்காமல் அதை தவிர்த்து ஓடவே முயற்சித்தார்.

எங்களது தொடர்ச்சியான முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில்தான் அனைத்து தொழிற்சங்கங்களின் தலைவர்களும் தலைமை அலுவலகத்துக்கு வந்திருந்தோம்.

அப்போது எங்களுக்கு பிரதான வாயில் மூடப்பட்டதால் பலவந்தமாக கதவை திறந்து உள்ளே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்த நேரத்தில் அங்கு இருந்த இரண்டாம் நிலை அதிகாரி எங்களுக்கு பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை பெற்றுத்தருவதாக உறுதியளித்த போதிலும் இன்றுவரை எந்தவொரு கலந்துரையாடலும் வழங்கப்படவில்லை.

ஜனாதிபதியும் சம்பந்தப்பட்ட அமைச்சரும் கொள்கை ரீதியாக சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை வனவிலங்கு திணைக்களத்துடன் இணைப்பது பற்றித்தான் கூறினார்களே தவிர, தற்போதைய அதிகாரிகளை பாதிக்கும் வகையில் உள்வாங்க சொல்லவில்லை.

அரசாங்கத்தின் கொள்கைகளை மீறி இந்த பணிப்பாளர் நாயகம் தன்னிச்சையாக தனது சொந்த நிகழ்ச்சி நிரலின்படி செயல்பட முயற்சிக்கிறார்.

இதற்கு எதிராகவே அனைத்து அதிகாரிகளும் சுகயீன விடுமுறையை பதிவு செய்து பணியில் ஈடுபடாமல் இப்போராட்டத்துக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

தற்போதைய அதிகாரிகளின் பதவிகளை குறைத்து, அவர்களின் பதவி உயர்வுகளை தடுத்து, வனவிலங்கு கட்டுப்பாட்டாளர் போன்ற ஆரம்ப நிலை பதவிகளுக்கு தற்போதைய அதிகாரிகளை தள்ளவே பணிப்பாளர் நாயகம் முயற்சிக்கிறார். இதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிப்பதில்லை. தற்போதைய சூழ்நிலையில் நாட்டை வீழ்த்தும் நோக்கம் எங்களுக்கு கிடையாது என்பதால் பூங்காக்களுக்கான நுழைவுச்சீட்டு வழங்கும் பணிகளை நாங்கள் நிறுத்தவில்லை. ஆனால் பணிப்பாளர் நாயகம் இதேபோன்று தொடர்ந்து தன்னிச்சையாக செயல்பட்டால் எதிர்காலத்தில் அனைத்து வனவிலங்கு சரணாலயங்களையும், தேசிய பூங்காக்களையும் முழுமையாக மூடுவதற்கு நாங்கள் தயங்க மாட்டோம் என எச்சரிக்கிறோம் என்றார்.