பயங்கரவாதத் தலைவனான பிரபாகரனுடன் இந்த நாட்டில் எந்தவொரு பௌத்த துறவியாவது இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதுண்டா என பௌத்த தேசியவாத அமைப்பான ராவணா பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று சனிக்கிழமை (11) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
பயங்கரவாதத் தலைவனான பிரபாகரன் கடந்த காலத்தில் இந்த நாட்டில் எத்தனையோ எல்லைக் கிராமங்களை அழித்து, அப்பாவி மக்களைக் கொன்று குவித்தான். 31 பௌத்த துறவிகளைப் படுகொலை செய்ததோடு, பிஞ்சுப் பிள்ளைகளையும் இரக்கமின்றி கொன்றான். இத்தகையதொரு கொடூரமான வரலாற்றுப் பின்னணி இருந்தபோதிலும், இந்த நாட்டில் வாழும் எந்தவொரு பௌத்த துறவியாவது அவனுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதுண்டா? ஒரு சதவீதமேனும் நாம் அவனுடன் புகைப்படம் எடுக்கவும் இல்லை, அவனது செயல்களுக்குத் துணை நிற்கவும் இல்லை.
ஆனால், ஏனைய மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் அவனுடன் சென்று நேரடியாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தவில்லையா? அவனுடன் அமர்ந்து கலந்துரையாடல்களில் ஈடுபடவில்லையா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அதுமட்டுமன்றி, இன்று பௌத்த மக்கள் மீது உயிர்த்த ஞாயிறு போன்ற கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடுத்து, பேரழிவை ஏற்படுத்தியது யார் என்ற உண்மை நிலையை அனைவரும் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் எப்போதுமே வன்முறையற்ற, அமைதியான முறையில் மிஹிந்து தேரர் இந்த நாட்டிற்கு காட்டிச் சென்ற உன்னத தர்மத்தின் வழியில் பௌத்தத்தைப் பாதுகாத்து வரும் துறவிகள் ஆவோம். இந்த நாட்டில் வாழும் பௌத்த மக்களும் அவ்வாறான அமைதி வழியையே பின்பற்றி வருகிறார்கள்.
ஆனால், வரலாற்றில் துப்பாக்கிகளின் பாயினட் முனைகள் மூலம் மதத்தைப் பரப்பியவர்கள், இன்று பௌத்தத்தைப் பற்றியோ அல்லது அதன் விழுமியங்களைப் பற்றியோ எந்தவொரு புரிதலும் இன்றி பௌத்த துறவிகளுக்கு எதிராகத் திட்டமிட்ட முறையில் செயற்பட்டு வருகிறார்கள்.
குறிப்பாக இணையத்தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பௌத்த துறவிகளை இலக்கு வைத்துத் தூற்றும் போது, நமது சொந்தச் சமூகத்தைச் சேர்ந்த சில அறிவிலிகளும் கூட அதன் உண்மைத் தன்மையை அறியாமல் அதற்கு ஆதரவாகக் கருத்துக்களைப் பதிவிடுவது மிகுந்த கவலைக்குரிய விடயமாகும்.
நாம் எந்தவொரு தீவிரவாதியுடனும் புகைப்படம் எடுக்கவில்லை. சஹரான் போன்ற பயங்கரவாதிகளுடனோ அல்லது பிரபாகரனுடனோ எமக்கு எந்தவிதமான தொடர்பும் இருந்ததில்லை, எங்களிடம் அவர்களோடு எடுத்த ஒரு புகைப்படங்கள் கூட இல்லை.
நாம் உண்மையான சிங்கள பௌத்த விழுமியங்களையும் இந்த நாட்டின் பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் அதேவேளை, இந்த நாட்டில் வாழும் ஏனைய மதங்களையும் மதிக்கத் தவறுவதில்லை. அதுவே நமது பண்பாடாகும். நாம் ஒருபோதும் பிற மதப் பள்ளிகளையோ அல்லது கோவில்களையோ தாக்கச் செல்வதில்லை, அவ்வாறு செய்வதற்கு நாம் முற்படுவதுமில்லை என்றார்.





.jpg)








