சிறுவர்களுக்கான சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்


 சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்கான முன்மொழிவொன்றை, கோடைக்காலத்திற்குப் பிறகு ஐரோப்பிய ஆணையம் சமர்ப்பிக்கும் என்று அதன் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் இன்று தெரிவித்துள்ளார்.
பிரஸ்ஸல்ஸில் செய்தியாளர்களிடம் பேசிய வொன் டெர் லேயன், "நம் குழந்தைகளுக்கு நிஜ உலகில் செலவிட நேரம் தேவை.

விளையாடுவதற்கும், நட்பை உருவாக்குவதற்கும், தவறுகளைச் செய்து கற்றுக்கொள்வதற்கும் அவர்களுக்கு நேரம் தேவைப்படுகிறது.

ஒரு அல்காரிதம் (Algorithm) அவர்களின் அடையாளத்தை வடிவமைப்பதற்கு முன்பாக, அவர்கள் தங்களின் சொந்த அடையாளத்தையும் ஆளுமையையும் வடிவமைத்துக் கொள்ள நேரம் அவசியம்" என்று கூறினார்.

மேலும், "இது குழந்தைகள் சமூக ஊடகங்களை அணுக முடியுமா என்பது பற்றியது அல்ல. சமூக ஊடகங்கள் நம் குழந்தைகளை அணுகலாமா மற்றும் எப்போது அணுகலாம் என்பது பற்றியதே ஆகும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.