
கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், நாட்டில் தற்போது புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 112,000ஆல் பாரியளவில் குறைவடைந்துள்ளதுடன், மறுபுறம் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை (13) நடைபெற்ற '2026 ஆரம்ப பிள்ளைப் பருவ தேசிய வாரம்' பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
"நாட்டில் தற்போது ஆபத்தான மற்றும் பாதுகாப்பற்ற முறையில் குழந்தைகள் பிறக்கும் வீதம் அதிகரித்து வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, திருமணமாகாத பாடசாலை மாணவிகள் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போதைய சூழலில் கணிசமாக உயர்வடைந்துள்ளது.
இவ்வாறான பின்னணியில், எவ்வித பாதுகாப்பும் இன்றி பிறக்கும் இந்த அப்பாவிப் பிள்ளைகளின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்துவது தார்மீகப் பொறுப்பாகும். எனவே, இத்தகைய குழந்தைகளுக்குத் தேவையான விசேட பாதுகாப்பை வழங்குவதற்கென பிரத்தியேகமான புதிய வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவது குறித்து அமைச்சு மட்டத்தில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.




.jpg)








