அரசின் முறைகேடுகளுக்கு எதிராக ஒன்றிணைய ஐக்கிய மக்கள் சக்தி மறுத்தது ; பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு


நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீட்டித்தல் மற்றும் அரசாங்கத்தில் ஊழல் மோசடிகள் குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அமைதி காப்பது துரதிஸ்டவசமானது. அரசாங்கத்தின் முறைகேடுகளை சுட்டிக்காட்ட ஒன்றிணையுமாறு விடுத்த அழைப்புக்கு பிரதான எதிர்க்கட்சி மதிப்பளிக்கவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் அதிருப்தி வெளிப்படுத்தினார்.

கொழும்பில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் குறுகிய காலப்பகுதியில் டெங்கு நோய் தீவிரமடைந்துள்ளது. இது உள்ளுராட்சிமன்றங்களின் பலவீனமான நிர்வாகத்தை வெளிப்படுத்துகிறது.டெங்கு பரவல் தீவிரமடைவதற்கு ஜனாதிபதி மறைமுகமாக பொறுப்புக் கூற வேண்டும்.

2017 ஆம் ஆண்டு உள்ளுராட்சிமன்றங்கள் பலவீனமடைந்ததை தொடர்ந்து நாட்டில் டெங்கு நோய் தீவிரமடைந்தது. தற்போதும் அவ்வாறான தன்மையே காணப்படுகிறது. கொழும்பு உட்பட பிரதான நகரங்களில் சாலைகளில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.முறையான கழிவகற்றல் இன்மையால் இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.

நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிப்பதற்கு அரசாங்கம் ஜனநாயக விரோத செயற்பாட்டை தற்போது முன்னெடுத்துள்ளது. தமக்கு தேவையான நீதியரசர்களுக்கு பதவி உயர்வு வழங்கி நீத்துறையை பலவீனப்படுத்தவே அரசாங்கம் முயற்சிக்கிறது. இது ஜனநாயகத்துக்கு விடுக்கும் மரண அடியாகும்.

நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டித்தல் உட்பட அரசாங்கத்தின் முறைகேடான செயற்பாடுகள் தொடர்பில் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அமைதி காக்கிறது. இந்த முறையற்ற செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைவதற்கு பகிரங்க அழைப்பு விடுத்தோம்.இருப்பினும் அதற்கும் இதுவரையில் பதில் கிடைக்கவில்லை.இது பிரதான எதிர்க்கட்சியின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது என்றார்.