மாவட்ட அபிவிருத்தியை விரைவுபடுத்த முக்கிய அரச முடிவுகள்


 மாவட்ட மட்டத்தில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்த்து அரச சேவையை மிகவும் வினைத்திறனானதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றும் நோக்கில், நாட்டின் அனைத்து மாவட்டச் செயலாளர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

கொழும்பு "நில மெதுர"வில் அமைந்துள்ள பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில் இது நடைபெற்றது.

மாநாட்டின் முதல் நாள் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலும், இரண்டாவது நாள் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன முன்னிலையிலும் நடைபெற்றது.

அங்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பல முக்கிய அரசாங்கக் கொள்கை முடிவுகளை அறிவித்தார்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் அங்கீகாரத்தைப் பெறும் அவசர பாலங்கள், வீதிகள் அல்லது கட்டடங்கள் புனரமைப்புப் பணிகளை மத்திய அரசாங்கத்தின் அங்கீகாரம் கிடைக்கும் வரை தாமதப்படுத்தாமல் நேரடியாக மேற்கொள்ளும் வகையில், வரவிருக்கும் வரவுசெலவுத் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனியான நிதியொதுக்கீட்டினை வழங்குவது குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த 13,000 குடும்பங்களை அடுத்த ஆண்டு மீள்குடியேற்றத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையற்ற வகையில் கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் குறித்து ஆய்வொன்றை மேற்கொண்டு அவற்றை நிறைவு செய்வதற்கு ஆதரவு வழங்கப்படும் எனவும், காணிப் பயன்பாட்டின் போது வனப் பாதுகாப்பு வலயங்களைப் பாதுகாத்து அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இந்த மாநாட்டில் சுட்டிக்காட்டினார்.

தரமான பொதுச் சேவைக்காக வினைத்திறனற்ற நிறுவனங்களை அகற்றுவதும், சுகாதாரம், கல்வி மற்றும் அரச பகுப்பாய்வாளர் திணைக்களம் போன்ற துறைகளில் உள்ள வெற்றிடங்களை விரைவாக நிரப்புவதும் அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் என ஜனாதிபதி இங்கு மேலும் வலியுறுத்தினார்.

இதேவேளை, அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்னவின் முன்னிலையில் நிர்வாகப் பிரச்சினைகள் மற்றும் சேவைத் தேவைகள் குறித்தும் இங்கு விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

அத்துடன், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் நிலவும் ஊழியர் வெற்றிடங்கள், அதிகாரிகளின் வருடாந்த இடமாற்றப் பிரச்சினைகள் மற்றும் எரிபொருள் கொடுப்பனவுகள் உள்ளிட்ட நிர்வாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் இங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே, ஒவ்வொரு மாவட்டத்திலும் விளையாட்டு வசதிகளை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மாவட்ட மட்டத்தில் அந்த அபிவிருத்திப் பணிகள் நடைபெறும் விதம் குறித்து மாவட்டச் செயலாளர்களுக்கு இங்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், அதற்காக நிலவும் பிரச்சினைகள் மற்றும் அதற்கு வழங்கக்கூடிய தீர்வுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், அஸ்வெசும நன்மைகள் கொடுப்பனவு முறைமையை வலுப்படுத்துதல், விவசாய உபகரணங்களுக்கான வரிச் சலுகைகள் நேரடியாக விவசாயிகளுக்குக் கிடைக்கும் வகையிலான ஒரு பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் அரச காணி குத்தகை அங்கீகாரத்தைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைக் குறைத்தல் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட அமைச்சுப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மாவட்ட மட்டத்திலான பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கும், அரச நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தி பொதுமக்களுக்கு விரைவான சேவையை வழங்குவதற்கும் அனைத்து அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என இந்த மாநாட்டில் மேலும் வலியுறுத்தப்பட்டது.