புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகளின் புதையல் இருப்பதாக தெரிவித்து அகழ்வு பணி!


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் (அ) பகுதி கணேஸ் திட்டத்திலுள்ள தனியார் காணியில் விடுதலைப் புலிகளின் புதையல் இருப்பதாக தெரிவித்து அகழ்வு பணி செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்றன.

குறித்த தனியார் காணியில் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் இருப்பதாக கூறி கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வுப்பிரிவினர் நீதிமன்றத்தின் அனுமதியைபெற்று ஜேசிபி இயந்திரத்தின் மூலம் அகழ்வு பணியை ஆரம்பித்திருந்தனர். இருப்பின் ஊடகங்களுக்கான செய்தி சேகரித்தலுக்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

ஊடகவியலாளருக்கு அப்பகுதி மக்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்த அகழ்வுபணியின் உண்மைத்தன்மையை வெளிக்கொண்டு வரும் நோக்கில் அப்பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற போது குறித்த அகழ்வு இடம்பெறும் பகுதிக்குள் செல்வதற்கும், காணொளி மற்றும் புகைப்படங்கள் பதிவு செய்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

நேற்றையதினம் இடம்பெற்ற அகழ்வின் போது எதுவும் கிடைக்காத நிலையில் முதலாம் நாள் அகழ்வு பணி நிறைவு பெற்றிருந்தது. இரண்டாம் நாள் அகழ்வு பணி இன்று (15) புதன்கிழமை நடைபெறவுள்ளது.

இருப்பினும் இதுவரை இடம்பெற்ற அகழ்வுப் பணிகளில் எவ்வித ஆயுதங்களோ, தங்கங்களோ மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.