டெங்கு பரவல்: கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீட வகுப்புகள் ஒரு வாரம் இணையவழியில்


 கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் கல்வி நடவடிக்கைகளை நாளை (14) முதல் ஒருவார காலத்திற்கு நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது நிலவி வரும் டெங்கு பரவலுக்கு மத்தியில், மாணவர்களிடமிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கையைக் கருத்திற்கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கல்வி நடவடிக்கைகள் இணையவழியில் இடம்பெற்ற போதிலும் பல்கலைக்கழகம் வழமை போல் திறந்திருக்கும் என்றும், அனைத்துப் பணியாளர்களும் வழக்கம் போல் சேவைக்குச் சமுகமளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மாணவர் விடுதிகளும் திறந்தே இருக்கும்.

இதேவேளை, நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இதற்கு முன்னதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைபீடம் மற்றும் முகாமைத்துவப் பீடம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகளும் இணையவழியில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.