கொழும்பு, கம்பஹாவில் HIV உள்ளிட்ட பாலியல் தொடர்பான தொற்றுகளை கண்டறிய நடமாடும் இரத்தப் பரிசோதனை திட்டம் ஆரம்பம்



சுகாதார மற்றும் மக்கள் ஊடக அமைச்சு, மனித நோய் எதிர்ப்பு குறைபாடு வைரஸ் (HIV), ஹெபடைட்டிஸ் B மற்றும் பிற பாலியல் தொடர்பான தொற்றுநோய்களை (STDs) ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் நோக்கில், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் நடமாடும் இரத்தப் பரிசோதனைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

தேசிய பாலியல் தொடர்பான தொற்றுநோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் (National STD and AIDS Control Programme) கீழ், சிறப்பு நடமாடும் மருத்துவக் கிளினிக்குகள் மூலம் இந்த இரத்தப் பரிசோதனைகள் சமூக மட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தப் பரிசோதனைகள் முழுமையாக தன்னார்வ அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதுடன், பரிசோதனைக்கு உட்படுவோரின் தனியுரிமை மற்றும் தகவல் ரகசியம் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது. பரிசோதனை முடிவுகள் சம்பந்தப்பட்ட நபருக்கே மட்டுமே வழங்கப்படும்.

பரிசோதனையில் தொற்றுநோய் அல்லது வேறு உடல்நலப் பிரச்சினை கண்டறியப்படும் நபர்களுக்கு தேவையான ஆலோசனை, மருத்துவ வழிகாட்டல் மற்றும் சிகிச்சை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் பாலியல் தொடர்பான தொற்றுநோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து, அவற்றின் பரவலைக் குறைப்பதுடன், பொதுமக்களுக்கு சிகிச்சை சேவைகளை எளிதில் அணுகும் வாய்ப்பையும் மேம்படுத்துவதே நோக்கமாகும்.