இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் மற்றும் தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களின் உரிமைகள் மற்றும் கோரிக்கைகளுக்காகத் தனியாக ஒழுங்கமைவதில் எவ்வித தவறும் இல்லை. வெவ்வேறு அரசியல் கருத்துக்களைக் கொண்ட குழுக்கள் ஒரே மேடைக்கு வருவதற்கு முன்பாக பல்வேறு வடிவங்களில் இணைவது ஆரோக்கியமானது.
அவர்கள் அனைவரும் தொடர்ந்தும் எமது ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். தற்போதைய அரசாங்கத்துடன் அவர்கள் யாரும் இணையப் போவதில்லை என்பதுடன், எதிர்கால தேசிய தேர்தல்களின் போது இந்த மக்கள் விரோத அரசாங்கத்தை வீழ்த்தும் ஒற்றை இலக்கிற்காக அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து செயற்படும் என்ற பலத்த நம்பிக்கை எமக்கு உண்டு.
அதேவேளை, நாட்டின் தேசிய பாதுகாப்பு இன்று பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. தேர்தல் காலத்தில் தேசிய பாதுகாப்பு பற்றிப் பேச விரும்புவோர் கதிரை, மேசைகளுடன் தன்னை வந்து சந்திக்குமாறு கூறிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் தற்போதைய பாதுகாப்பு உத்தரவாதம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
நாட்டில் இன்று தொடர்ச்சியான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாவதுடன், சிறைச்சாலைகளில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்களாக இருக்கும் சூழலில் நாட்டில் எவ்வாறு அமைதி நிலவுகிறது என அரசாங்கம் கூற முடியும்?
அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக அரசாங்கத்தின் ஒட்டுமொத்தப் பலவீனமும் அம்பலமாகியுள்ளது. சிறைக்குள் வன்முறை ஏற்பட்டு 24 மணித்தியாலங்கள் கடக்கும் வரையில் பொலிஸாரின் உதவியைச் சிறைச்சாலை நிர்வாகம் நாடவில்லை என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், நிலைமையைக் கட்டுப்படுத்த தமக்கு முறையான உத்தரவுகளோ அதிகாரமோ வழங்கப்படவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள் கூறுகின்றனர்.
அத்தோடு, இக்கட்டான அந்தச் சூழ்நிலையில் நீதி அமைச்சரைத் தொடர்புகொள்ள சிறைச்சாலை உயர் அதிகாரிகள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்ததாக வெளியாகும் தகவல்கள், இந்த அரசாங்கத்தின் நிர்வாகக் கட்டமைப்பு முற்றிலும் சீர்குலைந்துள்ளதையே காட்டுகின்றன.
தேர்தல் காலத்தில் தங்களை மிகவும் அறிவார்ந்த, தூய்மையான மனிதர்கள் கொண்ட அரசாங்கமாகவே இவர்கள் காட்டிக்கொண்டனர். ஆனால், இன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள், பேச்சுக்கள் மற்றும் அவர்களின் தரம் என்பவற்றை அவர்களின் நடத்தையின் மூலம் பொதுமக்கள் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளனர்.
தாங்கள் தேர்ந்தெடுத்தது மலர்ச் செடிகளையா அல்லது களைகளையா என்பதை மக்கள் இப்போது உணர்ந்துள்ளதால், மக்கள் மத்தியிலிருந்து இந்த அரசாங்கம் படிப்படியாக விலகிச் செல்கிறது.
முகநூலில் பகிரப்படும் கருத்துக்களைத் தாண்டி, அரசாங்கத்திற்கு உண்மையிலேயே மக்கள் ஆதரவு இருக்கிறதா என்பதை மதிப்பிடுவதற்கு மாகாண சபை தேர்தலே மிகச் சிறந்த வழியாகும். ஒன்பது வருடங்களாகத் தாமதிக்கப்பட்டு வரும் மாகாண சபை தேர்தலை நடத்தாமல், ஆளுநர்கள் மற்றும் அதிகாரிகள் மூலம் பிராந்தியங்களை நிர்வகிப்பது அரசியலமைப்பை முழுமையாக மீறும் செயலாகும்.
எனவே, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மக்கள் மத்தியில் பெரும் பிரபல்யம் இருக்குமாயின், உடனடியாக மாகாண சபை தேர்தலை நடத்தி அதனை நிரூபித்துக் காட்டுமாறு சவால் விடுக்கின்றோம் என்றார்.



.jpg)








.jpg)

