சுற்றுலா வீசாவில் வந்து சட்டவிரோதமாகப் பணியாற்றிய 94 சீனப் பிரஜைகளுக்கு 70 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா அபராதம்


சுற்றுலா வீசாக்களின் மூலம் வருகை தந்து வீசா விதிமுறைகளை மீறி நாட்டில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்து பணிபுரிந்த குற்றச்சாட்டினை ஒப்புக்கொண்ட 94 சீனப் பிரஜைகளுக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் 70 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளது.

மேற்படி வழக்கு வெள்ளிக்கிழமை (6) கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் நுவான் கௌசல்ய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவர் இவ்வாறு தீர்பளித்தார்.

சந்தேகநபர்கள் கைது நடவடிக்கை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தின் நிதி மற்றும் வணிகக் குற்ற வலயப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ராஜித்த வர்ணப்பிரிய மன்றில் முன்னிலையாகி விடயங்களை முன்வைக்கையில்,

சுற்றுலா வீசா மூலம் நாட்டுக்கு வருகை தந்த சீனப் பிரஜைகளான சந்தேகநபர்கள் வீசா விதிமுறைகளை மீறி, தங்கியிருந்து பணிபுரிந்து வருவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைவாக, குற்ற மற்றும் போக்குவரத்து மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சந்தன கொடித்துவாக்குவின் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவின் அத்தியட்சகர் கமல் ஆரியவன்ச ஆலோசனையின் பேரில் மேற்படி சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.

அவர் தொடர்ந்து விடயங்களை முன்வைக்கையில், அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது பிரதிவாதிகளான சீனப் பிரஜைகள் அடங்கிய குழுவினர் இராஜகிரிய பகுதியில் தங்கியிருந்த போது இணையவழி வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்டனர்.

சுற்றுலா வீசாக்கள் மூலம் நாட்டுக்கு வருகை தந்த சந்தேகநபர்கள் வீசா விதிமுறைகளை மீறி பணிபுரிந்தமை, இந்நாட்டில் உள்ள உழைக்கும் வர்க்கத்தினருக்கும் பொருளாதாரத்துக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் நாட்டில் இவ்வாறு வீசா விதிமுறைகளை மீறி தங்கியிருந்து தொழில் புரியும் ஏனைய வெளிநாட்டவர்களும் உணரும் வகையில் சந்தேகநபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குமாறும் நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.

பிரதிவாதிகளான 94 சீனப் பிரஜைகளும் தாம் விதிமுறைகளை மீறி நாட்டில் தங்கியிருந்து பணியாற்றியதாக நீதவான் முன்னிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இந்நிலையில் மன்றில் முன்வைக்கப்பட்ட இரு தரப்பு சாட்சியங்களையும் பரிசீலித்த நீதிவான் பிரதிவாதி ஒருவருக்கு தலா 75 ஆயிரம் ரூபா வீதம் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 94 சீனப் பிரஜைகளுக்கும் 70 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.