பொலிஸாரின் பெயரில் இணையவழி மோசடி; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!



பொலிஸ் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக போலிச் செய்திகளை அனுப்பி, தனிநபர் தரவுகளைத் திருடும் இணையவழி மோசடிகள் இடம்பெறுவது அவதானிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் விழிப்புடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு எச்சரித்துள்ளது.

போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிவேகமாக வாகனம் செலுத்தியதாகக் கூறி பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலிச் செய்திகளை அனுப்பி, மக்களின் தனிப்பட்ட தரவுகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக அதிவேக நெடுஞ்சாலைப் பிரிவின் பரிமாற்ற அலகுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்நிலையிலேயே பொதுமக்கள் இத்தகைய மோசடிகளில் சிக்கிகொள்ள வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

குறுஞ்செய்திகள் , மின்னஞ்சல் அல்லது ஏனைய செயலிகள் மூலம் வரும் சந்தேகத்திற்குரிய இணைப்புகளை ஒருபோதும் அனுக வேண்டாம். எந்தவொரு இணைப்பினூடாகவுவும் உள் நுழைவதுக்கு முன்னர் அனுப்பியவரின் விவரங்கள் மற்றும் இணையதளத்தின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் அடையாளம் தெரியாத இணைப்புகள் மூலம் தனிப்பட்ட தகவல்கள், வங்கி விவரங்கள், ஓடிபி குறியீடுகள் அல்லது கடவுச்சொற்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறும், உத்தியோகபூர்வ பொலிஸ் ஊடக அறிக்கைகள் மற்றும் அரசாங்க இணையதளங்கள் ஊடாக மட்டுமே தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான செய்திகள் மற்றும் சமூக வலைத்தளப் பதிவுகள் குறித்து உரிய அதிகாரிகளுக்கு உடனே தெரியப்படுத்துமாறு கோரியுள்ள பொலிஸார், பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தவிர்க்கத் தொலைபேசிகளையும் செயலிகளையும் உடனுக்குடன் புதுப்பித்து வைத்திருக்குமாறும், அவசரமாகப் பணத்தைச் செலுத்துமாறு கோரும் செய்திகள் குறித்து அவனத்துடன் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.