கடலில் நீர்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணி சடலமாக மீட்பு



வெலிகம கடற்பகுதியில் நீர்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது வலுவான அலை மற்றும் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டுப் காணாமல் போன 21 வயதுடைய டுனிசிய நாட்டுச் சுற்றுலாப் பயணி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று (09) ஞாயிற்றுக்கிழமை காலை வெலிகம 'பழைய கடை' கடற்கரையில் அவரது சடலம் ஒதுங்கியுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞர் நேற்று (08) சனிக்கிழமை பிற்பகல் தனது டுனிசிய நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து வெலிகம பழைய கடை கடற்கரைப் பகுதியில் நீர்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் பலத்த காற்று மற்றும் சீற்றமான கடல் நிலைமை காரணமாக உருவான பலத்த நீரோட்டத்தில் சிக்கி அவர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனார்.

பொலிஸ் கடலோரப் பாதுகாப்புப் பிரிவினர், கடலோரக் காவல் படையினர் மற்றும் தனியார் டைவிங் குழுவினர் இணைந்து அவரைத் தேடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்ட போதிலும் நேற்றைய தினம் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையிலேயே இன்றைய தினம் காலை அவரது சடலம் கரை ஒதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக வெலிகம தலைமைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.