சிறைச்சாலைக்குள் கலவரங்களை உருவாக்கும் அளவுக்கு எதிர்க்கட்சிக்கு அதிகாரம் இருக்குமாயின் நாட்டில் அரசாங்கம் ஒன்று எதற்கு ? - திலும் அமுனுகம





சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் மோதல்களுக்கு எதிர்க்கட்சியினரே காரணம் என அரசாங்கம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதுடன், சிறைச்சாலைக்குள் கலவரங்களை உருவாக்கும் அளவுக்கு எதிர்க்கட்சிக்கு அதிகாரம் இருக்குமாயின், நாட்டில் அரசாங்கம் ஒன்று எதற்கு என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (9) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

அவ்வாறு தங்களுக்கு அத்தகைய அதிகாரம் இருக்குமெனின், அது அரசாங்கத்தின் நிர்வாகத் தோல்வியையே வெளிப்படுத்துவதாக அமையும். இதேவேளை, தற்போதைய அரசாங்கம் சர்வாதிகாரப் போக்கிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறது. விசேடமாக, நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக மகாநாயக்க தேரர்கள், சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல தரப்பினரும் தமது எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும், எவருடைய கருத்துக்களுக்கும் செவி சாய்க்காது அரசாங்கம் தனது விருப்பத்தின்படி செயற்படுவது, நாட்டின் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதையே காட்டுகிறது என்றார்.