மண்முனை கண்ணகி பற்றிய விவாதங்களும் விளக்கங்களும் : ஆரையம்பதி முனா கானா

மண்முனை கண்ணகி பற்றிய விவாதங்களும் விளக்கங்களும்

ஆரையம்பதி முனா கானா



உலகநாச்சி இருந்து அரசாண்ட மண்முனை இராட்சியம், அங்கிருந்த கண்ணகி கோயில் இவைபற்றி 2016 மே 10, 22 யுன் 16, 28 ஆகிய திகதிகளில் இணையத்தளத்தில் ஆய்வாளர்களான வெல்லாவூர் கோபால் மற்றும் ஆரையம்பதி க.சபாரெத்தினம் ஆகிய இருவரும் மாறுபட்ட கருத்துக்களை வெளியீட்டு வந்ததை நீங்கள் அறிவீர்கள். தாழங்குடாவைச் சேர்ந்த திரு.காசிப்பிள்ளை ,போன்ற சில மூத்த பிரசைகள் கூறிய தரவுகளே இதற்கு காரணம். இவா்களின் கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் ஒதுக்கிவிடாமல் ஆராய்ந்து பார்ப்போம்.


விவாதத்திற்குட்பட்ட முன்று விடயங்கள்

1. உலகநாச்சி மாளிகை கட்டி இருந்து அரசாண்ட இடம் தற்போதுள்ள தாழங்குடாவிலா அல்லது மண்முனையிலா?
2. காவியங்களில் இடம்பெற்ற மண்முனைக் கண்ணகி கோயில் தாழங்குடாவில்லுள்ள கோயிலா அல்லது மண்முனையில் இருந்து அழிந்து போனதாக கருதப்படும் கோயிலா?
3. அப்போது மண்முனை கோயிலில் இருந்து அம்மனின் புனித சின்னங்கள் தற்போது தாழங்குடாவிலிருக்கிறதா ? அல்லது ஆரையம்பதி கோயிலிருக்கிறதா?

இவைகளே தற்போது இணையத்தில் சொற்சிலம்பம் ஆடப்படும் பொருட்களாகும். தொழிலுக்கு மட்டுமல்ல பேனாவுக்கும் ஒய்வு கொடுத்து, வாழ்க்கை எனும் நெடும் சாலையில் 92 ஆவது மயில் கல்லை தாண்டி தளர் நடையிலும் என்னையும் இந்த ஆட்டத்தில் சேர்ந்து ஆடுமாறு சில அன்பர்கள் கேட்டிருப்பதால், நான் அறிந்த கேள்வியுற்ற சில கருத்துக்களை கூறவிரும்புகின்றேன். இவை தர்க்க ரீதியிலாகச் சரியோ பிழையோ என்று உங்கள் மனச்சாட்சி என்ற நீதி மன்றத்தில் விவாதித்து தீர்ப்பை நீங்களே பெற்றுக்கொள்ளுங்கள்.

வெல்லாவூர் கோபால் அவா்களிடமும், இவருக்கு வாய்மொழித் தரவுகள் கொடுத்த திரு காசிப்பிள்ளை போன்ற மூத்த பிரசைகளிடமும் நான் சில கேள்விகள் கேட்க விரும்புகின்றேன். இவை மூத்த பிரசைகள் கொடுத்த தரவுகளின் அடிப்படையிலே இவ்வினாக்களை கேட்கின்றேன்.

1. மே 10 ஆம் திகதி குறிப்பின் படி. அக்காலம் முதல் தாழங்குடாவை மண்முனை என்றே அழைத்து வந்ததாகவும், இங்குள்ள பெரியவளவு என்ற இடமும், மாளிகையடித்தெரு என்ற இடமும் ஆதாரங்களாக கூறப்பட்டுள்ளன. அப்படியாயின் சரீரம் ஸ்தாபனத்தின் தலைவா் உட்பட ஏராளமான தாழங்குடா மக்கள் மண்முனையிலிருந்த பழைய பிள்ளையார் கோவிலை திருத்தி கும்பாபிசேகம் நடத்தி இக்கோயில் அமைந்துள்ள மண்முனைக்கு உலகநாச்சி புரம் எனப்பெயர் சுட்டியபோது காசிப்பிள்ளை போன்ற முத்த பிரசைகளே நீங்கள் ஏன் எதிர்க்க வில்லையா? உலகநாச்சி இருந்த தாழங்குடாவை அல்லவா உலகநாச்சி என்று பிரகடனப்படுத்தி இருக்க வேண்டும். உங்களுக்கு ஆதாரம் இருந்திருந்தால் சட்ட நடவடிக்கையல்லவா எடுத்திருக்க வேண்டும். ஒர் ஊர் பெயரை இன்னுமெர் ஊருக்கு சூட்டலாமா?

2. மே 22 இல் கூறப்பட்டுள்ளபடி தாழங்குடாவில் இருந்து அருள்பாலிக்கும் கண்ணகியே மண்முனை கண்ணகி எனவும் இது வீரையடி நிழலில் முதாட்டியால் சிறாம்பி அமைத்து அதில் வைத்து வணங்கி வந்ததாகவும் பின்பு களவாடப்பட்டதாகவும் ஒரு முக்கியஸ்தரை வினாவியபோது முதாட்டியின் வறுமை காரணமாக இதை விற்று விட்டதாகவும் அது தற்போது எங்குள்ளதெனத் தெரியாது எனவும் எனவும் கூறப்பட்டுள்ளது.

எனது கேள்வி என்வென்றால், உங்கள கோயிலிருந்து களவாடப்பட்ட புனித சின்னங்கள் முதாட்டி வைத்து வணங்கி வந்தபோது நீங்கள ஏன் அவரிடம் இருந்து இதைப்பெற முயற்சிக்கவில்லை. ஒர் பெரிய ஊர் மக்களின் புனிதசின்னங்களை முதாட்டியிடம் இருந்து பெற ஏன் சட்ட நடவடிககை எடுக்கவில்லை? ஊரே திரண்டு கொதித்தெழுந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமல்லவா? வறுமை காரணமாக தனவந்தருக்கு விற்றதாகவும் கூறுகிறீர்கள் அப்படியானால் நீங்களே முதாட்டிக்கு ஏதாவது பணம் கொடுத்து ஏன் வாங்காமல் விட்டிர்கள். இவைகளை பார்க்கும்போது ஒன்றுக்கொன்று முரண்பட்ட தகவல் ஆகவும் ஏற்றுக்கொன்ன முடியாததாகவும் இருக்கின்றது.

இவைகளுடன் மேலும் சில விபரங்கள கூற விரும்புகின்றேன்.

1. திரு சபாரெத்தினம் சமர்பித்துள்ள படத்தை பாருங்கள் அதில் மாண்மீயத்தில் கூறப்பட்டுள்ளதைப் போல மண்னேறிமுனை என்பது வாவிக்குள் நிலப்பரப்பு ஒர் முனையாக உட் புகுந்திருப்பதை காணலாம். எனவே இப்பகுதியே மண்முனை என்பதே பொருந்தும்.

2. தாழங்குடாவின் தென்பகுதியிலுள்ள வாவி புதுக்குடியிருப்பு வரை வளைந்து குடாவாக சென்றுள்ளது. எனவே இப்பகுதி தாழங்குடா எனும் பெயருக்கே பொருந்துகின்றது மண்முனை என்பது பொருத்தமல்ல.

3. சக்தி வழிபாட்டு ஆய்வு செய்த திரு.சி.கணபதிப்பிள்ளை அவா்கள் வெளியிட்ட பத்தினி வழிபாட்டில் கண்ணகியின் புனித சின்னங்கள் ஊர்வலமாக வந்த பாதையிலுள்ள ஊர்களை குறிப்பிடும்போது மகிழடித்தீவு, மண்முணை, தாழங்குடா, காத்தநகர்(ஆரைப்பற்றை) புதுக்குடியிருப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே புதுக்குடியிருப்பு வேறு, தாழங்குடா வேறு மண்முனை வேறு. தாழங்குடாதான் மண்முனையல்ல.

4. மண்னேறி முனைக்கு தெற்கேயுள்ள கொக்கட்டி மரத்தை வெட்டியபோது என்று கூறப்பட்டிருப்பதால் தாழங்குடாவுக்கு தெற்கே அல்ல, மண்முனைக்கு தெற்கேதான்  கொக்கட்டிச்சோலை இருப்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

5. ஒர் அரசியின் மாளிகையைச்சுற்றி அவரின் குடும்ப உறவினர், மந்திரி பிரதானிகள். படைத்தளபதிகள் என பலரும் வாழும் வாசஸ்தலங்களும், அரசியை சந்திக்க வரும் பிரதானிகளுக்கான இருப்பிடம்  மற்றும் தங்குமிடம் போன்ற கட்டடங்கள் அமைந்திருக்கும் இதற்கு பெரும் நிலப்பரப்பு தேவைப்படும். இதற்கு பெரிய வளவு எனப் பெயரிடப்பட்டுள்ள சிறிய நிலப்பரப்பு போதுமா?

6. அரசியின் தன் மாளிகையைச் சுற்றி மேல்குறிப்பிட்டவா்களே குடியேற்றுவாரேயெனின் சிறுபான்மையினரை குடியேற்றியிருப்பாளா?

7. மாளிகையடி தெரு என்றிருப்பதை நான் ஒரளவிற்கு ஏற்றுக்கொண்டாலும் முழுமையாக ஏற்க முடியாது. நாவலடி றோட், கல்லடி ஒழுங்கை, நெல்லியடி பாடசாலை என துார இடங்களுக்கும் போகும் பாதையையும் குறிக்கலாம் அல்லவா?

இனி கண்ணகி கோவில் பற்றிய சில செய்திகளை கூற விரும்புகின்றேன்.

1. வின்சன் மகளீர் வித்தியாலய அதிபராக இருந்து ஒய்வு பெற்று வெளிநாட்டில் வதியும் திருமதி. பரம்சோதி பாக்கியராசா அவா்களிடமிருந்து கிடைத்த செய்தி யென்று. தனது தந்தையின் தந்தையான சின்னவாத்தியார் என்று அழைக்கப்படும் சின்னத்தம்பி ஆசிரியா். இவா் கோவில் கணக்குப்பிள்ளையாகவும் இருந்தவா். இவரிடம் மண்முனையை சேர்ந்த முதாட்டி வந்து ஐயா இந்த பேழை என்னிடம் இருக்கும்போது உள்ளே சிலம்பொலி மணி ஒசை, குரவை என்பன கேக்கின்றன. இதை நீங்களே கந்தசுவாமி கோயிலில் வைத்து பராமரியுங்கள் என கொடுத்துவிட்டு போனதாக தனது தந்தையார் ஏரம்பமுர்த்தி கூறியதாக கூறியுள்ளார் . இதுதான் நாம் வணங்கும் அம்பாள் என்றும் கூறியுள்ளார்.

2. ஆரையம்பதி கந்தசுவாமி கோவிலில் நம்பிமார்  பூசைசெய்த காலத்தில்,ஓர் நம்பியார் இந்த பேழையை திறந்த பார்த்தபோது அவருடைய கண்கள் குறுடாகி விட்டதாகவும் இதனால் அவருக்கு இறதற்கண்நம்பியார் என்ற பெயர் உண்டு.

3. மண்முனை கண்ணகி கோவிலில்  பூசை செய்த பத்தகட்டாடியார் பற்றி ஆரையம்பதியில் நம்பகூடியதும் நம்ப முடியாததுமான பல கதைகள் உள்ளன.

4. ஆரையம்பதி கண்ணகி அம்பாளுக்கு பரம்பரை கட்டாடியர்களாக  பூசை செய்பவா்கள் இங்கிருக்கும் பொன்னாச்சி குடியினரே. பத்தக்கட்டாடியாரும் இவா்களது பரம்பரையை சேர்ந்தவராவார்.

5. தற்போது தாழங்குடா கண்ணகி கோவிலில் கும்பாபிசேகத்தின் பின்பே சிலை வழிபாடு இருப்பதாகவும் முன்னர் முகக்களை வைத்தே பூசை செய்யப்பட்டதாகவும் நான் அறிகின்றேன்.

6. இறுதியாக எனது முக்கிய கேள்வி தாளங்குடாவில் முதாட்டி இருந்திருந்தால் அவரிடம் இருந்து புனித சின்னங்களை அக்காலத்தில் இருந்த தாழங்குடா மக்கள் வாங்காமல் விட்ட வாங்க முடியாமல் போன மர்மமென்ன?

இறுதியாக வெல்லாவூர் கோபால் அவா்களிடமும் சபாரெத்தினம் அவா்களிடமும் தாழ்மையாக வேண்டுவது என்னவென்றால் நீங்கள் இருவரும் உங்களுக்கு தெரிந்த மற்றவா்களிடம் கேட்டு தெரிந்த செய்திகளை எல்லாம் சொல்லி விட்டீர்கள். இனிமேல் நீங்கள் இவற்றை எழுதுவதை விட்டுவிடும்படி தயவாள் கேட்டுக்கொள்கின்றேன். நம் எல்லோருடைய வாதங்களில் இருந்தும் வாசகர்களே தீர்மானிக்கட்டும்.