தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் (தேசிய பாடசாலை ) புதிய அதிபராக பா.சந்திரேஸ்வரன் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்





(எஸ்.கார்த்திகேசு , இரா.நர்த்தனன் )
 தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் (தேசிய பாடசாலை )  15 வது புதிய அதிபராக பா.சந்திரேஸ்வரன் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

 திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் (தேசிய பாடசாலை ) 15வது புதிய அதிபராக தம்பிலுவிலைச் சேர்ந்த கல்விமாணி பாலசுந்தரம் சந்திரேஸ்வரன் தனது கடமைகளை பொறுப்பெற்றுக் கொண்டார்.

இவ் நிகழ்வானது திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரனின் முன்னிலையில் கொவிட் 19 சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக இடம்பெற்ற நிகழ்வில் புதிய அதிபர் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டு இருந்ததுடன் இன்றுவரை சிறந்த முறையில் பாடசாலை நிருவாகத்தினை நெறிப்படுத்தி கல்வி நடவடிக்கைகளை ஆரோக்கியமாக முன்னெடுத்துச் சென்ற முன்னாள் அதிபர் எஸ்.ரவிஸ்கரனும் நிகழ்வில் கலந்து கொண்டு இருந்தார்

 திருக்கோவில் பிரதேசம் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர் தனது பாடசாலைலைக் கல்வியை நிறைவு செய்து 1984 ஆம் ஆண்டு ஆங்கில ஆசானாய் முதல் நியமனம் பெற்று பொத்துவில் ஏற்றம் பாடசாலையில் தனது ஆசிரியர் சேவையை ஆரம்பித்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து 1985ஆம் ஆண்டு பொத்துவில் மெதடிஸ்த மிசன் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக இடமாற்றம் பெற்றுச் சென்று 1990ஆம் ஆண்டு வரை ஆசிரியர் பணியை பொத்துவிலில் முன்னெடுத்து இருந்தார்.

இதனையடுத்து 1990ஆம் ஆண்டு தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்று இப்பாடசாலையில் கடமையாற்றி இருந்ததுடன் 2010ஆம் ஆண்டு விநாயகபுரம் பாலக்குடா பாலவிநாயகர் வித்தியாலயத்தில் அதிபராகவும் பின் 2010ல் இருந்து 2015ஆம் ஆண்டுவரை தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்திலும் அதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரில் பிரதி அதிபராகவும் தனது கல்விச் சேவையினை முன்னெடுத்து வந்துள்ளதுடன் அம்பாரை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனத்தின் சிரேஷ்ட நிருவாக உறுப்பினரும் இருந்த சமூக ஆன்மீகப் பணிகளை முன்னெடுத்து வருகின்றார்.

இந்நிலையில் 03 06 2021ந் திகதியில் இருந்து 
தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் (தேசிய பாடசாலை)  புதிய அதிபராக பாலசுந்தரம் சந்திரேஸ்வரன் (பாபு) நியமிக்கப்பட்டுள்ளதுடன் இவ் நியமனமானது தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை தெரிவு செய்ய நடாத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையில் தெரிவின் அடிப்படையில் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவை குழுவின் செயலாளரின் கடிதத்தின் பிரகாரம் இவ் அதிபர் நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.