போதைப்பொருள் பயன்படுத்திய 08 பஸ் சாரதிகளும், நடத்துனர் ஒருவரும் கைது!


 களுத்துறை பகுதியில் பொதுப்போக்குவரத்து பஸ்களில் கடமையில் ஈடுபட்டிருந்த போது, போதைப்பொருள் பயன்படுத்தியிருந்த குற்றச்சாட்டின் கீழ் 08 பஸ் சாரதிகளும் நடத்துனர் ஒருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (19) செவ்வாய்க்கிழமை களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட கூட்டு சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய அதிகாரிகளும், தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனமும் இணைந்து இந்த விசேட சோதனையை முன்னெடுத்திருந்தனர்.

பொதுப்போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் போதைப்பொருள் பாவித்த வண்ணம் கடமைகளில் ஈடுபடுகிறார்களா என்பதைக் கண்டறியும் நோக்கில் இந்த திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, கடமையில் இருந்த போது போதைப்பொருள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 09 பேர் அடையாளம் காணப்பட்டு, பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 35 முதல் 57 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் பாயாகல, யட்டியானை, தொடாங்கொடை, தெபுவன, மீகஹதென்ன மற்றும் களுத்துறை தெற்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் இனங்கண்டுள்ளனர்.