
சுமார் 14 கோடியே 56 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 'குஷ்' (Kush) போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்தி வர முயன்ற இலங்கை வர்த்தக பயணிகள் இருவர், திங்கட்கிழமை (18) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் கொழும்பு, தெமட்டகொட பகுதியை சேர்ந்தவர்களாவர். அதில் ஒருவர் மதுபானக் கடை ஒன்றில் பணிபுரியும் 23 வயதுடைய இளைஞர் எனவும், மற்றையவர் 30 வயதுடைய நாட்டாமி (மூட்டை தூக்குபவர்) ஒருவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் இன்று காலை 9:30 மணியளவில் தாய்லாந்தின் பெங்கொக் நகரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் யு.எல்.- 403 (UL-403) என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்துள்ளனர்.
இவர்கள் விமான நிலையத்தின் வருகை முனையத்தின், 'கிரீன் சேனல்' ஊடாக வெளியேற முயன்ற போது, அவர்களின் பயணப் பொதிகளிலிருந்த ஆடைகளுக்கு நடுவே, 28 பாக்கெட்டுகளாக மிக நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 கிலோ கிராம் 562 கிராம் 'குஷ்' போதைப்பொருள் சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையும், மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.








.jpeg)



