.jpeg)
ஹட்டன் டிக்கோயா நகர் வர்த்தக ஸ்தாபனமொன்றில் தனிமையில் வாழ்ந்து வந்த தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் டிக்கோயா நகரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்டவர்கள் வர்த்தகரான எஸ். காளிமுத்து சத்திவேல் (82 வயது) மற்றும் அவரது மனைவியான சகுந்தலாதேவி (82 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட தம்பதியினரின் பிள்ளைகள் தலைநகரில் வசித்து வந்த நிலையில் முன்னதாக நகை வர்த்தக நிலையமொன்றை நடத்தி வந்த இவர்கள் பின்பு வர்த்தக நிலையத்தை மூடி விட்டு அதன் பின்புறமாக இருந்த தமது வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.
வீட்டில் கொள்ளையடிக்க வந்த எவராவது இத்தம்பதிகளை கொலை செய்து விட்டு தப்பியோடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இவர்களது பிள்ளைகள் தமது பெற்றோருக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட போதிலும், அதற்கு அவர்கள் பதிலளிக்காததால், அவர்கள் அருகிலுள்ளவர்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அருகிலுள்ள வர்த்தக ஸ்தாபனங்களில் உள்ளவர்கள் கடையைத் திறந்து பார்த்தபோதே கணவனும் மனைவியும் வெட்டுக்காயங்களுடன் இறந்த நிலையில் இருப்பதை அறிந்து அட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இக்கொலைச் சம்பவம் தொடர்பாக அட்டன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தடயவியல் பரிசோதனைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். பிரதான வீதி கடையொன்றில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றிருப்பது குறித்து நகர வாழ் வர்த்தகர்ளும் மக்களும் அச்சம் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






.jpeg)





