விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை...


 பாராளுமன்ற விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள யுத்த வீரர்கள் நினைவிடத்தில் இன்று (18) நடைபெற்ற ஒத்திகைப் பணிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நாளை (19) தேசிய யுத்த வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி தலைமையில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு பாராளுமன்ற விளையாட்டு மைதானத்தின் யுத்த வீரர்கள் நினைவிடத்திற்கு அருகில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்கான ஒத்திகைப் பணிகள் இன்று நடத்தப்பட்டுள்ளன.

இந்த ஒத்திகைப் பணிகளும், நாளை நடைபெறவுள்ள பிரதான நிகழ்விற்கான ஏனைய ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்த வேளையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சுமார் 35 பேரடங்கிய குழுவினர், ஒத்திகைப் பணிகளுக்கும் அதிகாரிகளின் உத்தியோகபூர்வ கடமைகளுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் யுத்த வீரர்கள் நினைவிட வளாகத்திற்குள் அனுமதியின்றி நுழைவதற்கு முயற்சித்துள்ளதாக பொலிஸார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தச் சந்தர்ப்பத்தில், பொலிஸ் அதிகாரிகளினால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டதுடன், அங்கு கூடியிருந்த குழுவினரை அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.