நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: 166 பெண் சிறைக் கைதிகளும் ஏனைய சிறைச்சாலைகளுக்கு அவசரமாக இடமாற்றம்!


நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறை மோதல்களினால் சிறைச்சாலை வளாகத்திற்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அங்கிருந்த அனைத்துப் பெண் கைதிகளும் நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு அவசரமாக இடமாற்றப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வன்முறை மோதல்களின் போது சிறைச்சாலை வளாகத்தின் உள்கட்டமைப்புகளுக்குக் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதால், அவசரகால பாதுகாப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கையாக அங்கிருந்த 166 பெண் கைதிகளும் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகச் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

பெண் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கோடும், நீர்கொழும்பு சிறைச்சாலையின் அவசர மறுசீரமைப்புப் பணிகளை அதிகாரிகள் ஆரம்பிப்பதற்கு ஏதுவாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த பெண் கைதிகள் வாரியபொல, போகம்பரை, அங்குணகொலபெலஸ்ஸ மற்றும் குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.