மாத்தறையில் பேருந்து – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : 19 பேர் காயம்


மாத்தறை - திஸ்ஸ பிரதான வீதியின் வீரவில பகுதியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளொன்றும் ஒன்றோடொன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 19 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
காயமடைந்தவர்களில் 11 ஆண்களும் 8 பெண்களும் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

திஸ்ஸமஹாராமவிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தொன்று, வீரவில பிரதேச செயலகத்திற்கு அருகில் வைத்து மோட்டார் சைக்கிளுடன் மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்தில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தீவிர நிலையில் இருந்த நால்வர் மேலதிக சிகிச்சைகளுக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் வீரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.