
இலங்கையில் எதிர்கால தலைமுறையை புகையிலைப் பழக்கத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில், 2010 ஜனவரி 1 அல்லது அதற்குப் பின்னர் பிறந்த எவருக்கும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதை நிரந்தரமாகத் தடைசெய்யும் "Tobacco-Free Generation" கொள்கையை அறிமுகப்படுத்துமாறு இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) மற்றும் புகையிலை, மதுபானம் மற்றும் சட்டவிரோத போதைப்பொருட்கள் தொடர்பான நிபுணர் குழு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இக்கொள்கை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுவதையும், பின்னர் போதைப்பொருள் பாவனைக்கு இட்டுச் செல்லப்படுவதையும் தடுக்க உதவும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், புகையிலை உலகின் மிக ஆபத்தான வணிகப் பொருட்களில் ஒன்றாகும் என்றும், அதன் வணிகம் புதிய பயனர்களை தொடர்ந்து உருவாக்குவதிலேயே தங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
SLMA வெளியிட்டுள்ள தகவலின்படி, இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 20,000 பேர் புகையிலை காரணமான நோய்களால் உயிரிழக்கின்றனர். 2019 ஆம் ஆண்டில் புகையிலை பயன்பாட்டால் நாட்டிற்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு ரூ.214 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
புகையிலை நிறுவனங்கள் சமூக ஊடகங்கள், விற்பனை நிலையங்கள் மற்றும் தயாரிப்பு வடிவமைப்புகள் மூலம் இளைஞர்களை குறிவைத்து வருவதாகவும், இளம் வயதிலேயே புகையிலைப் பழக்கத்தை தொடங்குபவர்கள் வாழ்நாள் முழுவதும் கடுமையான உடல்நல பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த முன்மொழிவு இலங்கையின் தற்போதைய சட்டங்களுடனும், உலக சுகாதார அமைப்பின் Framework Convention on Tobacco Control (FCTC) உள்ளிட்ட சர்வதேச உடன்படிக்கைகளுடனும் இணங்குவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உலகளவில் இதுபோன்ற சட்டங்களை அமல்படுத்திய முதல் நாடாக மாலைத்தீவு விளங்குகிறது. அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து, 2009 ஜனவரி 1 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்களுக்கு புகையிலை விற்பனையை நிரந்தரமாகத் தடைசெய்யும் சட்டத்தை 2026 ஆம் ஆண்டு நிறைவேற்றியுள்ளது. கனடா, டென்மார்க், சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் இதுபோன்ற நடவடிக்கைகளை பரிசீலித்து வருகின்றன.
ஒவ்வொரு நாளும் சுமார் 50 பேர் புகையிலை தொடர்பான நோய்களால் உயிரிழக்கின்றனர் என்பதைக் குறிப்பிட்டுள்ள SLMA, எதிர்கால தலைமுறையின் ஆரோக்கியத்தையும் நாட்டின் நீண்டகால பொருளாதார முன்னேற்றத்தையும் பாதுகாக்கும் நோக்கில் இந்தக் கொள்கையை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு அரசை வலியுறுத்தியுள்ளது.




.jpg)







.jpg)
