நுளம்புகள் பெருகும் இடங்களை பராமரித்த 4,672 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை


கடந்த 2026 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில், நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான வகையில் சூழலை பராமரித்தமை தொடர்பாக நீதிமன்றங்களில் 4,672 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டெங்கு நோய் வேகமாக பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக, சுகாதார அமைச்சு, பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI) மற்றும் இலங்கை பொலிஸார் இணைந்து நாடு தழுவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு திட்டங்களை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுளம்புகள் பெருகும் இடங்களை வைத்திருப்பவர்களுக்கோ அல்லது நுளம்புகள் பெருகுவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் தங்களது வளாகங்களை அசுத்தமாக வைத்திருக்கும் நபர்களுக்கோ எதிராக தண்டனைச் சட்டக் கோவையின் 262 ஆவது பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2007 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நுளம்புகள் பெருகுவதைத் தடுக்கும் சட்டத்தின் பிரகாரம், ஏதேனும் ஒரு வளாகத்தில் நுளம்புகள் பெருகும் இடங்கள் காணப்பட்டாலோ அல்லது நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவாக அசுத்தமாக வைத்திருந்தாலோ, அது தொடர்பாக 'சிவப்பு எச்சரிக்கை' அறிவித்தலை வெளியிட சுகாதாரப் பிரிவினருக்கு சட்டபூர்வ அதிகாரம் உள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

அதன்படி, அந்த சிவப்பு எச்சரிக்கையை அலட்சியம் செய்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை உரிய காலத்திற்குள் நிறைவேற்றத் தவறும் பட்சத்தில், இச்சட்டத்தின் 6 ஆவது பிரிவின் கீழ் அதிகபட்சமாக 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படக்கூடிய குற்றமாகும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.