8 வயது சிறுவன் கார் எரித்ததாக பரவும் தகவல் ஆதாரமற்றது – பொலிஸார்


குருநாகலில் உள்ள பாடசாலை ஒன்றின் வளாகத்தில் சொகுசு கார் ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் தொடர்பாக, 8 வயது சிறுவன் ஒருவன் காரைக் கொளுத்தியதாகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ ஆதாரமற்றது என பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவின் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில்,

கடந்த ஜூலை 3 ஆம் திகதி குருநாகல் பகுதியில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 1.4 கோடி ரூபா பெறுமதியான கார் ஒன்று திடீரெனத் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.

அந்தப் பாடசாலையில் கல்வி பயிலும் 8 வயது சிறுவனே இந்தத் தீ வைப்புக்குக் காரணம் என குருநாகல் பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்று அளிக்கப்பட்டதை அடுத்து, இது குறித்துப் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்தனர்.

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் காணொளியில் இருக்கும் சிறுவன், அதே பாடசாலையில் கல்வி கற்கும் 8 வயது மாணவன் என்பதும், விபத்து நடந்த நேரத்தில் அவன் அந்த காரின் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தான் என்பதும் உண்மைதான் எனப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும், அந்தச் சிறுவன் காரைத் தீயிட்டுக் கொளுத்தினான் என்பதற்கான எந்தவொரு நேரடிச் சாட்சியங்களோ அல்லது தடய அறிவியல் ஆதாரங்களோ இதுவரை கண்டறியப்படவில்லை எனப் பொலிஸார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான விபரங்கள் ஏற்கனவே நீதிமன்றத்தில் அறிக்கை செய்யப்பட்டுள்ளன. கார் தீப்பற்றியதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறியும் நோக்கில், அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரின் நிபுணத்துவ ஆய்வுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.