
கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பொழுதுபோக்கு, கலாசாரம் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை எளிதாக அணுகுவதற்கு ஏதுவாக, பொழுதுபோக்கு வரிகளை கொழும்பு மாநகர சபை குறைத்துள்ளதுடன், இதற்கான புதிய வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட இந்த புதிய வரி திருத்தங்கள், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதை அடுத்து உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளன.
இன்று (16) கொழும்பு மாநகர சபையில் நடைபெற்ற கூட்டத்தின்போதே கொழும்பு மாநகர சபை மேயர் விராய் கெய்லி பல்தசார் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் பதவியேற்றபோது, கொழும்பு மக்களுக்கு பொழுதுபோக்கு, கலாசாரம் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை ரசிப்பதற்கு கூடுதல் வாய்ப்புகளை உருவாக்குமாறு ஆளுநர் எங்களைக் கேட்டுக்கொண்டார். அதனை மனதில் வைத்து, மக்களுக்கு அதனை எவ்வாறு எளிதாக்கலாம் என்று ஒரு சபையாக ஆராய்ந்து, வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் பொழுதுபோக்கு வரியை 5 சதவீதத்தால் குறைப்பதற்கு அனுமதி வழங்கினோம். தற்போது அந்த முன்மொழிவு நிறைவேற்றப்பட்டு வர்த்தமானியும் வெளியாகியுள்ளது.
இந்த புதிய வரி விகிதங்கள் அனைத்து பொழுதுபோக்கு வரி பிரிவுகளுக்கும் பொருந்தும். பொதுமக்கள் இந்த நிகழ்வுகளை தடையின்றி ரசிப்பதற்கும், இலங்கையின் படைப்பாற்றல் துறைக்கு பக்கபலமாக இருப்பதற்குமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, உள்ளூர் இசை நிகழ்ச்சிகளுக்காக இதுவரை விதிக்கப்பட்டிருந்த 12 சதவீத பொழுதுபோக்கு வரியை 7 சதவீதமாகக் குறைத்துள்ளோம். இந்த வரிக்குறைப்பின் மூலம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு சலுகை கிடைக்கிறது. எனவே, அந்த சலுகையைக் கருத்திற்கொண்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தங்களது நுழைவுச்சீட்டு விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் நிகழ்வுகளை அதிகளவிலான மக்கள் பங்குபெறுவதற்கு ஏற்ப மலிவாக்க முடியும்.






.jpg)






