
நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இன்று இந்த நாட்டில் சிறைச்சாலை அதிகாரிகளின் உயிருக்கு கூட பாதுகாப்பு இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வரலாற்றில் என்றுமில்லாதவாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கே தங்களது கடமைகளைச் செய்ய முடியாத அளவிற்கு அச்சுறுத்தலான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதுவரை 10 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். கடந்த காலத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரைக் கொலை செய்த மோசமான வரலாற்றைக் கொண்ட இந்த அரசாங்கத்திற்கு இவ்வாறான கொலைகள் புதிய விடயமல்ல.
அண்மைக் காலத்தில் நாட்டின் பல இடங்களிலும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதுடன், நாட்டின் வரலாற்றில் மிக அதிகமான கொலைகள் இந்த ஜே.வி.பி / என்.பி.பி அரசாங்கக் காலத்திலேயே இடம்பெற்றுள்ளன. தற்போது வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்கள் செய்வது நிறுத்தப்பட்டிருப்பதற்குக் காரணம், கடந்த காலங்களில் அத்தகைய ஆர்ப்பாட்டங்களைச் செய்து எந்தவொரு அரசாங்கத்தையும் வேலை செய்ய விடாமல் தடுத்தவர்கள் இவர்கள்தான் என்பதால் மட்டுமே.
சிறைச்சாலைகளில் நிலவும் கடுமையான வசதிக்குறைவுகள் மற்றும் கைதிகளின் அநாவசிய மன அழுத்தம் காரணமாகவே அங்கு தொடர்ச்சியாக பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
போதைப்பொருள் ஒழிப்பு என்ற பெயரில் பலரைக் கைது செய்து சிறையில் அடைத்தாலும், சிறைச்சாலைகளின் உள்ளே இருக்கும் வசதிகள் குறித்து அரசாங்கம் எவ்வித கவனமும் செலுத்துவதில்லை. தற்போதைய சிறைக்கைதிகளில் மூன்றில் இரண்டு பங்கினர் போதைப்பொருள் விவகாரங்களுடன் தொடர்புடையவர்களாவர்.
வெறுமனே சிறையில் அடைப்பதன் மூலம் மட்டும் போதைப்பொருள் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. சிறைகளுக்குள் 3 அல்லது 4 கிராம் போன்ற சிறிய அளவிலான போதைப்பொருள் வழக்குகளுடன் தொடர்புடைய சாதாரண நபர்களே அதிகமாக உள்ளதாக சிறைக்கைதிகளுடனான கலந்துரையாடல்களின் மூலம் அறிய முடிகிறது.
மாறாக, பெருமளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் பெரிய புள்ளிகள் யாரும் இன்னும் சிறைகளில் இல்லை. வெளிநாடுகளில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை நாட்டுக்கு கொண்டுவரப்போவதாகக் கூறி அரசாங்கம் போலியான காட்சிகளை மாத்திரமே நடத்துகிறதே தவிர, நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தில் எந்தவொரு குறைவும் ஏற்படவில்லை என்றார்.




.jpg)








