
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, பிரான்ஸின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள Buis-les-Baronnies நகரில் ஜூலை 14 அன்று நடைபெற்ற பிரான்ஸ் தேசிய தின நினைவு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.
தனது நண்பர்களைச் சந்திப்பதற்காக அந்தப் பகுதிக்கு சென்றிருந்தபோது, அந்நகரின் மேயரின் அழைப்பின் பேரில் விழாவில் பங்கேற்றதாக அவர் தனது Facebook பதிவில் தெரிவித்துள்ளார்.
விழாவில் உரையாற்றிய அவர், பிரெஞ்சுப் புரட்சியின் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகளையும், பிரான்ஸ் ஜனநாயக ஆட்சிமுறைக்குக் காட்டும் அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.
இந்தக் கொள்கைகளே தன்னை பிரான்ஸில் பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர ஊக்குவித்ததாகவும், அங்கு பெற்ற அனுபவம் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் மதித்து ஆட்சி செய்ய கற்றுக்கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பிரான்ஸிலும் உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும் அவர் கவலை வெளியிட்டார்.
தற்போது உலகம் பெரும் மாற்றங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், நாடுகளையும் மக்களையும் ஒன்றிணைத்து அமைதி மற்றும் முன்னேற்றத்தின் பாதைக்கு வழிநடத்தக்கூடிய தொலைநோக்கு பார்வையுள்ள தலைவர்கள் தேவை எனவும் அவர் வலியுறுத்தினார்.













