
யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தின் மேல் "ட்ரோன்" பறக்கவிட்ட குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தின் மேல், நேற்றைய தினம் திங்கட்கிழமை (13) மாலை வேளை "ட்ரோன்" பறந்துள்ளது. அதனை அவதானித்த சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள், அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அத்தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் "ட்ரோனை" பறக்க விட்ட இளைஞனை கைது செய்ததுடன், ட்ரோனையும் பொலிஸார் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை, வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அமைக்கப்படும் பாலங்கள் தொடர்பில் காணொளிகளை பதிவு செய்வதற்காக, வீதி அபிவிருத்தி அதிகார சபையால் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலைக்கு அருகில் வீதியில் அமைக்கப்படும் பாலத்தை காணொளி எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் ட்ரோன் ஊடாக எடுத்த காணொளிகளை பரிசோதிக்கும் நடவடிக்கையிலும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.




.jpg)








