தேர்தலில் போட்டியிடும் அரச அதிகாரிகளின் விடுமுறை குறித்து புதிய சுற்று நிரூபம்


உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு, பிரதி மேயர் அல்லது உப தவிசாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் உரிமைகளைக் கொண்ட அரச அதிகாரிகளுக்கு, மாதத்திற்கு 6 நாட்கள் சம்பளத்துடனான விடுமுறை அல்லது சம்பளமற்ற விடுமுறையை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, நிறுவன ஆவணக்கோவையின் XXXII ஆம் அத்தியாயத்தின் 2:3:4 ஆம் உப பிரிவைத் திருத்தி வெளியிடப்பட்ட, 2021 ஜூன் 25 ஆம் திகதியிட்ட 12/2021 ஆம் இலக்க பொது நிர்வாகச் சுற்றறிக்கை மேலும் திருத்தப்பட்டு புதிய விதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜூன் 22 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், நிறுவன ஆவணக்கோவையின் XXXII ஆம் அத்தியாயத்தில் 2:3:4:1 என்ற புதிய உப பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

அந்த புதிய விதியின்படி, உள்ளுராட்சி மன்றமொன்றின் பிரதி மேயர் அல்லது உப தவிசாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரி ஒருவருக்கு, முன்னர் இருந்ததைப் போன்று சம்பளத்துடனான ஆறு நாட்கள் விடுமுறையைப் பெற்றுக்கொள்ள அல்லது தனது விருப்பத்திற்கேற்ப அந்தப் பதவிக்காலம் முழுவதும் சம்பளமற்ற விடுமுறையைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்தத் திருத்தமானது பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.