
நாட்டில் உள்ள 18 முதல் 35 வயது வரை உள்ள பெண்களில் 3 சதவீதமானோர் இன்று பல்வேறு பொருளாதார மற்றும் சமூகக் காரணிகளால் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் பின்னணியை ஆராய்ந்து விசேட நீதிமன்றக் கட்டமைப்பொன்றை உருவாக்கி, சட்ட ரீதியான தீர்வுகளை விரைந்து காண வேண்டும் என்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மகளிர் முன்னணியின் தலைவர் குமாரி பதிரகே தெரிவித்தார்.
கொழும்பில் புதன்கிிழமை (15) ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த காலங்களில் நாட்டில் புதிய அரசியல் முகமொன்றை எதிர்பார்ப்பதாகக் கூறி, மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட போராட்டங்கள் மற்றும் மாற்றங்களின் விளைவாக இன்று ஒட்டுமொத்தப் பொதுமக்களின் மனங்களும் பெரும் ஏமாற்றமடைந்துள்ளதுடன், அரசாங்கம் மக்களின் முக்கிய பிரச்சினைகளைத் திசைதிருப்பி வருகிறது. குறிப்பாக, கடந்த ஜூலை 5 ஆம் திகதி இரவு நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற துரதிஷ்டவசமான மோதல் சம்பவத்தில் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழப்பு போன்ற பாரியளவிலான பாதுகாப்பு மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்குத் தகுந்த தீர்வு காணாமல், தற்போதைய ஆட்சியாளர்கள் ஊடகங்களுக்கு முன்னால் வந்து பொய் நாடகமாடி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
நாட்டின் மொத்தச் சனத்தொகையில் பெரும் பங்களிப்பை வழங்கும் பெண்களில் 3 சதவீதமானோர் இன்று பல்வேறு பொருளாதார மற்றும் சமூகக் காரணிகளால் சிறைப்படுத்தப்பட்டுள்ள அவல நிலை தோன்றியுள்ளது. குறிப்பாக, 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள் நாட்டின் தற்போதைய வாழ்வாதார நெருக்கடி மற்றும் குடும்பத்தைப் பராமரிப்பதற்கு வழியின்மை போன்ற காரணிகளால், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுக்குள் தள்ளப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே, இவ்வாறு கைதிகளாக மாறியுள்ள பெண்களின் பின்னணிகளை ஆராய்ந்து அவர்களுக்காக விசேட நீதிமன்றக் கட்டமைப்பொன்றை உருவாக்கி, சட்ட ரீதியான தீர்வுகளை விரைந்து காண வேண்டும் என மகளிர் விவகார அமைச்சரிடம் அவசரக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அமைச்சர் நாட்டின் சிறைச்சாலைகளுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு, அங்குள்ள பெண்களின் நிலைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து சரியான வாழ்வாதாரத் தீர்வுகளைப் பெற்றுத் தர வேண்டும்.
இதேவேளை, நாட்டில் தற்போது டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதனால், நாட்டின் பிரதான வைத்தியசாலைகள் அனைத்தும் நோயாளர்களினால் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது. அரச அலுவலகங்களும் பாடசாலைகளும் அதிகமாகக் காணப்படும் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் வீதிகளைத் துப்பரவு செய்யும் பணிகளோ அல்லது டெங்கு நுளம்புகளைக் கட்டுப்படுத்தும் புகை விசுறும் நடவடிக்கைகளோ முறையாக முன்னெடுக்கப்படுவதில்லை என அரச ஊழியர்களும் பொதுமக்களும் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் மாகாண சபைகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில், தாம் பதவிகளில் இருந்தபோது டெங்கு நோய் பரவும் வரை காத்திருக்காமல், முன்கூட்டியே மக்களை விழிப்புணர்வூட்டித் துப்பரவுத் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தனர்.
தற்போதைய அரசாங்கம்'கிளீன் ஸ்ரீலங்கா என்ற பெயரில் திட்டங்களை ஊடகங்களில் அறிவித்தாலும், அவர்கள் நடைமுறையில் நாட்டின் வீதிகளையோ அல்லது சூழலையோ சுத்தம் செய்யவில்லை, மாறாக நாட்டின் மத்திய வங்கியை மாத்திரமே முழுமையாக கிளீன் செய்துள்ளனர். எனவே, தேர்தல்களின் போது தங்களது அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக வன்முறைகளிலும் பொய்ப் பிரசாரங்களிலும் ஈடுபடுவதை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும். டெங்கு நோய்த் தாக்கத்திலிருந்து பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு, சுகாதாரத் துறை நிபுணர்களின் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெற்று, நாடு தழுவிய ரீதியில் முறையான வேலைத்திட்டங்களை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.






.jpg)






