போதைப்பொருள் ஒழிப்புக்கு மேலும் கடுமையான சட்டங்கள் இயற்றப்படும் – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல


போதைப்பொருள் வர்த்தகத்துக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்ட அரசியல் பாதுகாப்பு வலைப்பின்னல் முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் ஒழிப்புக்காக எதிர்வரும் காலப்பகுதிகளில் கடுமையான பல சட்டங்கள் இயற்றப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (17) நடைபெற்ற பொதுமக்கள் பாதுகாப்பு சார் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் வெற்றி பெற்றுள்ளன. போதைப்பொருளுக்கு எதிராக அரச இயந்திர செயலொழுங்கு வெற்றி பெற்றுள்ளது.

போதைப்பொருள் வர்த்தகத்துக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்ட அரசியல் பாதுகாப்பு வலைப்பின்னல் முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களுக்கிடையில் நெருங்கிய தொடர்பு காணப்பட்டது.

கடந்த கால ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவே பாதாளக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களை பாதுகாத்தார்கள்.அதுதான் தற்போது வெளிப்படுகிறது.

போதைப்பொருள் ஒழிப்புக்காக எதிர்வரும் காலப்பகுதிகளில் கடுமையான பல சட்டங்கள் இயற்றப்படும். போதைப்பொருள் ஒழிப்புக்கான நடவடிக்கைகளை கிராமிய மட்டத்தில் கொண்டு சென்றுள்ளோம். போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகள் வெற்றி பெற்றுள்ளன என்றார்.