எரிபொருள் விலையில் பாரியதொரு மாற்றம் ஏற்படாது - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்
உலக சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. இந்த மாதம் இறுதி பகுதியில் எரிபொருள் விலையில் பாரியதொரு மாற்றம் ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திக்குமாரகே தெரிவித்தார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
மத்திய கிழக்கில் மோதல் நிலைமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து உலக சந்தையில் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டது.அதற்கமைய கடந்த மாதம் எரிபொருள் விலையை குறைத்து அதன் பயனை நுகர்வோருக்கு வழங்கினோம்.
மத்திய கிழக்கில் மோதல் நிலைமை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் உலக சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளது. ஆனால் எரிபொருள் விநியோக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படவில்லை.இருப்பினும் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய இந்த மாத இறுதி பகுதியில் எரிபொருள் விலைச்சூத்திரத்துக்கு அமைய எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படும்.
கடந்த மாதம் இறுதி பகுதியில் இடம்பெற்ற திருத்தத்துக்கு அமைவாகவே தற்போது திருத்தம் மேற்கொள்ளப்படும். இந்த மாத கட்டண திருத்தத்தில் பாரியதொரு மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது என்றார்.



.jpg)










