
கொழும்பு மாநகர எல்லைக்குள் வாகனத் தரிப்பிட கட்டணங்களை வசூலிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் போலியானவை என கொழும்பு மாநகர சபை தெளிவுபடுத்தியுள்ளது.
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வாகனத் தரிப்பிடக் கட்டணங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரப்பப்படும் வீடியோக்கள் போலிச் செய்திகள் என மாநகர சபை சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது பரவி வரும் வீடியோவானது, கடந்த மார்ச் 18, அன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காணப்பட்ட நீண்ட வரிசைகள் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, வாகனத் தரிப்பிடக் கட்டண வசூலிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவாகும் என மாநகர சபை விளக்கியுள்ளது.
எனினும், அரசாங்கத்தினால் கியூஆர் குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறை மற்றும் வாகன இலக்கத் தகடுகளின் ஒற்றை-இரட்டை இலக்க முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எரிபொருள் வரிசைகள் குறைந்தன. இதனையடுத்து, கொழும்பு மாநகர சபையின் நிதிக்குழுவின் ஒப்புதலுடன், கடந்த மார்ச் 23, ஆம் திகதி காலை 6.00 மணி முதல் வழமையான வாகனத் தரிப்பிட நிர்வாகமும் கட்டண வசூலிப்பும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
எனவே, கொழும்பு நகருக்குள் வாகனத் தரிப்பிட வசதிகளைப் பயன்படுத்தும் அனைத்து வாகன ஓட்டுநர்களும் தங்களுக்குரிய தரிப்பிடக் கட்டணங்களை தொடர்ந்து செலுத்துமாறு கொழும்பு மாநகர சபை கேட்டுக்கொண்டுள்ளது.






.jpg)






