
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்த்து, அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றித் தொடர்ந்து வழங்குவதற்காக உலகச் சந்தையில் நிலவும் மிகக் குறைந்த விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்ய முடியாமல் போகலாம் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பில் புதன்கிழமை (15) நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் சவால்களை எதிர்கொள்வதில், கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதிக்குப் பின்னர் அரசாங்கம் மிகவும் அவதானமாகச் செயல்பட்டு வருகிறது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை சீராகி வரும் போதிலும், ஏதேனும் ஒரு துறையை முடக்கிவிட்டு எம்மால் முன்னோக்கி நகர முடியாது.
அவ்வாறு முடக்கினால் அதனை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப் பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க நேரிடும். எனவே, எரிபொருள், மின்சாரம் மற்றும் உரம் ஆகிய அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றித் தொடர்ந்து வழங்குவதே அரசாங்கத்தின் முதன்மை இலக்காகும். தற்போது டீசல் நுகர்வு 11 வீதத்தாலும், பெற்றோல் நுகர்வு 9 வீதத்தாலும் குறைந்துள்ள போதிலும், மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக எரிபொருள் ஒதுக்கீட்டு முறையைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டியுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் மசகு எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கங்களுக்கு அமைவாகவே உள்நாட்டு எரிபொருள் விலைகள் தீர்மானிக்கப்படும். சர்வதேச ரீதியில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் போர் நிறுத்த உடன்படிக்கைகள் குறித்துப் பேசப்பட்டாலும், எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன. இதனால், நாட்டில் எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து எரிபொருளை விநியோகிப்பதை உறுதிப்படுத்த நாம் முயற்சிப்பதால், உலகச் சந்தையில் நிலவும் மிகக் குறைந்த விலைக்கு எம்மால் எரிபொருளைக் கொள்வனவு செய்ய முடியாமல் போகலாம் என்றார்.






.jpg)






