பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ! ஒருவர் காயம்

திருகோணமலை, புல்மோட்டை,  அரிசிமலை பகுதியில் 500 ஏக்கர் காணியை இன்று செவ்வாய்க்கிழமை அளவீடுசெய்யும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களுக்கும் பாதுகாப்பு கடமைக்காக வந்திருந்த பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இதனால் அபூபக்கர் (வயது 54) என்பவர் காயமடைந்து புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நில அளவை திணைக்களத்தினால் பூஜாபூமி திட்டத்தின் கீழ் இந்த அளவை செய்யப்படவிருந்தது.


இந்த நடவடிக்கையை எதிர்த்து அரிசிமலை பகுதியில் ஹர்த்தாலும் அனுஷ்டிக்கப்பட்டது. பொலிஸ் பாதுகாப்புடன் இன்றுக்காலை 8.30 மணியளவில் அங்குவந்த நிலஅளவையாளர்கள் மக்களின் காணிகளுக்குள் நின்று பொலிஸ் பாதுகாப்புடன் அளவீடுகளை மேற்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு விரைந்த மூன்று கிராமங்களையும் சேர்ந்த சுமார் 600க்கும் மேற்பட்ட மக்கள், நிலஅளவீட்டை உடனடியாக நிறுத்துமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போதே பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. அதன்போது பொதுமக்களில் ஒருவர் காயமடைந்தார்.

அரிசிமலை பகுதியை அண்மித்துள்ள பொன்மலைக்குடா, வீரந்தீவு மற்றும் தேத்தாவடி தீவு ஆகிய கிராமங்களை ஊடறுக்கும் வகையிலேயே இந்த நில அளவை மேற்கொள்ளப்படவிருந்ததாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

அங்கு அமைக்கப்பட்டுள்ள விஹாரையை அண்மித்ததாகவே இந்த மூன்று கிராமங்களும் இருக்கின்றன என்று தெரிவித்த மக்கள்,  இந்த கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்த சுமார் 135 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் புல்மோட்டையில் தங்களுடைய உறவினர்கள் வீடுகளில் இன்னும் வாழ்ந்துவருவதாக சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில் ஸ்தலத்துக்கு விரைந்த திருகோணமலை சிரேஷ்ட  பொலிஸ் அத்தியட்சகர் ஏ.யே.மார்க்ஸ் அங்கிருந்த திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபிக் உள்ளிட் அரசியல்வாதிகள் மற்றும் மக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து நிலஅளவீடும் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து இந்த நில அளவீடு தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக சிரேஷ்ட  பொலிஸ் அத்தியட்சகர் ஏ.யே.மார்க்ஸ் அறிவித்தார். அதனையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அரிசிமலை பகுதியில் இதற்கு முன்னர் 5 தடவைகள் நில அளவீடு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

 இறுதியாக ஜூலை 31ஆம் திகதி நில அளவை மேற்கொள்விருந்த வேளை மக்கள் குடியமர்ந்துள்ள கிராமங்களுக்குள் அல்லாமல் அரிசிமலையின் ஏனைய பகுதியில் நிலஅளவீடு செய்ய இணக்கம் காணப்பட்டது.

இதேவேளை, அங்கு இன்று குழுமியிருந்த மக்கள், கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இடம்பெயர்ந்துள்ள மக்கள் ஏற்கனவே குடியிருந்த காணிகள் அவர்களுக்கே மீண்டும் வழங்கப்படவேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

சம்பவ இடத்துக்கு திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபிக், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர், குச்சவெளி பிரதேச சபை தலைவர் எ.பீ.முபாறக், உபதலைவர் எ.ஹதம் பாபா தௌபிக், திருகோணமலை மேலதிக அரசாங்க அதிபர் எஸ். அருள்ராசா, கிண்ணியா நகரசபை தலைவர் டாக்டர்.ஆர்.எம்.கில்மி, குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் எம். ஹாசிக், குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர்  எம்.புஸ்பகாந்தன்,   குச்சவெளி பிரதேச சபை செயலாளர்  கிருஷ்நேந்திரன் ஆகியோர் வருகை தந்தனர்.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு புல்மோட்டை  பொலிஸார் மாத்திரமின்றி குச்சவெளி, நிலாவெளி, திருகோணமலை, ஸ்ரீபுரம் ஆகிய பொலிஸ் நிலையங்களில் இருந்தும் பொலிஸாரும்  கலகம் அடக்கும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.