சட்டவிரோத தங்கம் மற்றும் ரூ.1.69 கோடி பணம் பறிமுதல் – 10 பேர் விளக்கமறியலில்


சட்டவிரோதமான முறையில் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 கிலோகிராம் 790 கிராம் தங்கம் மற்றும் 1 கோடியே 69 இலட்சம் ரூபா பணத்துடன் பெண்கள் இருவர் உட்பட 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், புதன்கிழமை (22) மடவலைப் பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த 8 ஆண்களும் 2 பெண்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்களிடமிருந்து குறித்த தங்கமும் பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்கள் வலப்பனை, நாவலப்பிட்டி, வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை மற்றும் மோதரை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 42 முதல் 58 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக சோதனைகளின் போது, தங்கத்தின் தரத்தைச் சோதிக்கப் பயன்படுத்தப்படும் உரைகல், 1 லீற்றர் அசிட் மற்றும் 2 கிரைண்டர் இயந்திரங்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் பன்வில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் 30 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.