
இலங்கையின் சிறுவர்களை இணைய அச்சுறுத்தல்கள், இணைய வழி வன்முறைகள் மற்றும் அவர்களின் நல்வாழ்வுக்கு ஏற்படும் எதிர்மறையான தாக்கங்களிலிருந்து பாதுகாப்பதற்காக, ஒழுங்குமுறை மற்றும் கல்விச் தீர்வுகளை உள்ளடக்கிய விரிவான தேசிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இடம்பெற்றது.
டிஜிட்டல் கல்வி பணிக்குழுவின் பல்துறை செயற்குழுவின் பங்கேற்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலந்துரையாடலில், சிறுவர்களுக்கு டிஜிட்டல் தளங்கள் மூலம் கிடைக்கும் நன்மைகளை உறுதிப்படுத்தும் அதேவேளை, இணையவழி மூலம் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து அவர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் வயதுக் கட்டுப்பாடுகளை விதிக்க விவாதித்து வரும் பின்னணியில், இவ்வாறான தடைகளை அமுல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் அதன் பயனுள்ள தன்மை குறித்தும் இங்கு விரிவாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.
முதன்முறையாக இவ்வாறான தடையை விதித்த நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் படி, 85% சிறுவர்கள் வேறு வழிகள் மூலம் தொடர்ந்து அந்தத் தளங்களைப் பயன்படுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கற்றல் வாய்ப்புகள் இழக்கப்படுதல், அபாயகரமான வேறு மாற்றுத் தளங்களின் பயன்பாடு அதிகரித்தல், சமூகத் தொடர்புகள் சீர்குலைதல், பயனாளர்களின் தனியுரிமைக்கு ஏற்படும் அச்சறுத்தல்கள் போன்ற பாதகமான பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
அதற்கமைய, இணைய வழியிலான துஷ்பிரயோகங்கள், பாதகமான உள்ளடக்கங்களுக்கு ஆட்படுதல், அடிமையாக்கும் இணையப் பழக்கவழக்கங்கள் மற்றும் உளவியல் பிரச்சினைகளுக்குச் பயனுள்ள வகையில் தீர்வுகாண்பதற்காக புத்திசாதுரியமான அணுகுமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதன்படி டிஜிட்டல் எழுத்தறிவை உயர்த்துதல் மற்றும் பெற்றோர்களையும் பிள்ளைகளையும் பலப்படுத்துதல்.
இணையத் தளங்களின் பொறுப்புக்கூறலை அதிகரித்தல் மற்றும் அடிமையாக்கும் அம்சங்களைச் செயலிழக்கச் செய்தல்.
வடிவமைப்பிலேயே பாதுகாப்பு என்பதில் கவனம் செலுத்துதல்.
ஏற்படும் பாதிப்புகளுக்குப் பலனுள்ள முறையில் பதிலளிக்கும் அமைப்பையொன்றை உருவாக்குதல் என்பன தொடர்பில் ஆராயப்படுகின்றது.
இச்செயற்பாட்டிற்கு இணைவாக, மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட பாடசாலை மட்டத்திலான வரைவு வழிகாட்டல் கோவையும் இதன்போது சமர்ப்பிக்கப்பட்டது.
சர்வதேச கட்டமைப்புகள் மற்றும் தேசிய அனுபவங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டல்கள், உரிய அதிகாரிகளின் அனுமதியின் பின்னர் பயிற்சிகள் மற்றும் வழிகாட்டல் திட்டங்களுடன் நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.









.jpg)



