இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்கள்தான் நாடாளுமன்றத்தில் இருப்பேன் – அர்ச்சுனா எம்.பி.
இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற நேரிடலாம் என யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், "நான் இந்த நாடாளுமன்றத்தில் நீண்ட காலம் இருக்கப் போவதில்லை. இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்கள்தான் இருப்பேன். உங்களுக்கு நீண்ட நாட்கள் தொந்தரவு தரமாட்டேன்," என்று கூறினார்.
வடக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பான பல முறைப்பாடுகள் மற்றும் ஆதார ஆவணங்களை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும், சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கும் சமர்ப்பித்திருந்த போதிலும், இதுவரை எந்தவித விசாரணையும் முன்னெடுக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாகவும் முறையான விசாரணை நடைபெறவில்லை என்றும், அந்த விவகாரத்தை வெளிக்கொணர்ந்ததற்காக தமக்கு மிரட்டல்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் எதிர்நோக்க நேரிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், தம்மை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, வடக்கு சுயேட்சை பிரதிநிதிகள் அநியாயமாக இலக்காகப்படுத்தப்படுகிறார்கள் என்ற எண்ணத்தை தமிழ் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
சுயேட்சை பிரதிநிதிகளுக்கு சமமான அணுகுமுறையை உறுதிப்படுத்தி, தாம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அர்ச்சுனா இராமநாதன் வலியுறுத்தினார்.













.jpg)
