இலங்கை நேரப்படி இன்றைய தினம் பிற்பகல் வேளையில் இருந்து இந்த முடக்கம் ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மற்றும் இணையக் கண்காணிப்புத் தளங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்தத் தொழில்நுட்பக் கோளாறு பிரதானமாக கணினிகள் மற்றும் லேப்டாப்களில் இணைய உலாவி (Web Browser/Desktop version) மூலம் பேஸ்புக்கைப் பயன்படுத்தும் பயனாளர்களையே வெகுவாகப் பாதித்துள்ளது.
கணினி வழியே பேஸ்புக் கணக்குகளை அணுக முயன்றவர்களுக்கு, "கணக்கு தற்காலிகமாகக் கிடைக்கவில்லை. தளத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக உங்கள் கணக்கை அணுக முடியாதுள்ளது. இது விரைவில் சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். சில நிமிடங்களில் மீண்டும் முயற்சிக்கவும்" என்ற பிழைச் செய்தி காண்பிக்கப்படுகிறது.
வியக்கத்தக்க வகையில், பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் உள்ள பேஸ்புக் மொபைல் செயலி வழக்கம் போல இயங்கி வரும் அதேவேளை, சிலருக்கு அதுவும் மந்தகதியில் இயங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் பயனாளர்களும் புதிய உள்ளடக்கங்களை புதுப்பிக்க முடியாமை, கணக்குகளுக்குள் நுழைய முடியாமை மற்றும் சேவையக இணைப்புத் துண்டிப்பு போன்ற சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.
மெட்டா நிறுவனத்தின் மற்றுமொரு முக்கிய செயலியான வட்ஸ்அப் மெசஞ்சர் இந்த முடக்கத்தால் பெரியளவில் பாதிக்கப்படவில்லை எனவும், அது வழக்கம் போல் தடையின்றி இயங்குவதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகளாவிய இணைய முடக்கங்களைக் கண்காணிக்கும் 'Downdetector' இணையத்தளத்தில், குறுகிய நேரத்திற்குள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முடக்கம் தொடர்பாக உலகெங்கிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அமெரிக்கா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகள் உள்ளிட்ட பல பிராந்தியங்களில் இந்தத் தடங்கல் ஒரே நேரத்தில் பதிவாகியுள்ளது.
இந்த திடீர் உலகளாவிய முடக்கத்திற்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து மெட்டா நிறுவனம் இதுவரை உத்தியோகபூர்வமாக எவ்வித விளக்கத்தையும் அளிக்கவில்லை. தொழில்நுட்பக் குழுவினர் இப்பிரச்சினையைக் கண்டறிந்து சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகத் தொழில்நுட்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.















.jpg)