ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஜனநாயகத்தை அழித்து, சர்வாதிகார ஒற்றைக் கட்சி ஆட்சியை உருவாக்க முயற்சிக்கிறது. நீதித்துறையின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய சட்டத்தரணிகள் சம்மேளனம், ஞாயிற்றுக்கிழமை (19) இலங்கை மன்றக் கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்த "ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான மக்கள் கருத்தாடல்" நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
நீதித்துறை எந்தளவுக்கு சுதந்திரமாக இருக்கிறதோ, அந்தளவுக்கு ஜனநாயகம் வலுவடையும். சர்வதேசக் கொள்கைகளும் கோட்பாடுகளும் எமது நாட்டிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. எதிர்க்கட்சியில் இருக்கும்போது இவ்வாறான சர்வதேசக் கொள்கைகள் மற்றும் உடன்படிக்கைகள் பற்றிப் பேசுபவர்கள், அதிகாரம் கிடைத்தவுடன் அத்தகைய அதிகார மையங்களை உறுதிப்படுத்துவதை மறந்துவிடுகின்றனர். இன்று உயர் நீதிமன்றங்களில் பல நீதியரசர் நியமனங்கள் செய்யப்பட வேண்டியிருந்தாலும், அரசாங்கம் அவற்றைச் செய்யாமல் இழுத்தடிக்கிறது. இந்த நியமனங்களை மேற்கொள்ளாமல் இருப்பது அடிப்படை உரிமை மீறும் செயலாகும், அத்துடன் நீதித்துறைக்கு விடுக்கப்படும் தேவையற்ற அழுத்தமுமாகும்.
உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 65 இல் இருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 63 இல் இருந்து 65 ஆகவும் உயர்த்த அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறையை அரசியலமைப்புத் திருத்தம் மூலம் ஒழிக்காமல், இந்த விடயத்தை மட்டும் ஏன் முன்னெடுக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. பாராளுமன்றத்தில் இது குறித்துக் கேட்டபோது, அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று அரசாங்கம் தெரிவிக்கிறது. ஆனால், அரசாங்கம் செய்ய முற்படுவது ஜனநாயகத்தை முற்றாக அழிக்கும் செயலாகும். இதன் மூலம் நீதித்துறையின் சுதந்திரம் சீர்குலைவதுடன், நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையும் இல்லாமல் போகும். இது ஜனநாயகத்தை அழித்து, சர்வாதிகார ஒற்றைக் கட்சி ஆட்சியை உருவாக்க மேற்கொள்ளும் முயற்சியாகும்.
ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், மக்கள் வழங்கிய ஆணையைப் புறக்கணித்துவிட்டு, ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்குப் பதிலாக சர்வாதிகார ஒற்றைக் கட்சி ஆட்சியை நிலைநாட்ட முற்படுவது ஏன்? அரசாங்கத்தின் இந்த பைத்தியக்காரத்தனமான போக்கு குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வர்க்க, நிற, கட்சி பேதங்களைக் கடந்து, மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையைத் தோற்கடிக்க வேண்டும்.
அரசாங்கத்தின் இத்தகைய செயல்பாடுகளால், சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகளிடமிருந்து அழுத்தம் ஏற்பட்டு பொருளாதார ரீதியாக சவால்கள் உருவாகலாம். இந்தத் திருத்தங்கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் நிலைப்பாடு என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ,எஸ்.பி. பிளஸ் போன்ற சலுகைகளுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, இது குறித்து மக்களும் அரசாங்கமும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நீதித்துறைக்கு அழுத்தம் கொடுத்த காலம் மீண்டும் ஒருமுறை உருவாகக் கூடாது. நீதித்துறையின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.














